தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Wednesday, November 28, 2012

ஈயமும் பித்தளையும்!

First Published : 27 November 2012 12:35 AM IST
சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி வழங்கியதற்கு எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வருவதால் நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் தொடர்ந்து மூன்றாம் நாளாக முடங்கியது.
 இப்பிரச்னைக்கு சுமுகத் தீர்வுகாண, திங்கள்கிழமை நடத்தப்பட்ட அனைத்துக் கட்சிக் கூட்டத்திலும் எந்த உடன்பாடும் ஏற்படாததைக் காணும்போது, சென்ற மழைக்காலக் கூட்டத் தொடர் போல, குளிர்காலக் கூட்டத் தொடரும் ஒரு பணியும் நடைபெறாமலேயே முடிந்துபோகுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது.
 நாடாளுமன்ற நடைமுறை விதிஎண் 184-ன் கீழ், இந்தப் பிரச்னை தொடர்பாக விவாதம் நடத்தவும், வாக்கெடுப்பு நடத்தவும் வேண்டும் என்று பாஜக தொடர்ந்து வலியுறுத்துகிறது. மத்திய அரசோ, விதி எண் 193-ன் கீழ் விவாதம் நடத்தலாம், ஆனால்  வாக்கெடுப்பு தேவையில்லை என்று சொல்கிறது. விவாதத்தை இரண்டு தரப்பும் ஏற்றுக்கொண்ட நிலையில், "வாக்கெடுப்பு' பிரச்னையாவதற்குக் காரணம் அரசியல்தான்.
 விதிஎண் 184-ன் படி பாஜக கோரிக்கையை அரசு ஏற்கும் என்றால், வாக்கெடுப்பு நடத்த அரசு ஏன் தயங்க வேண்டும் என்று கேட்கலாம். மத்திய அரசு இதற்கு இணக்கம் தெரிவிக்கத்தான் போகிறது. ஆனாலும், எதிரியை வேண்டுமென்றே முன்னேறவிட்டு, பிறகு தாக்கித் தோல்வியுறச் செய்யும் உத்தியை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி கையாளுகிறது என்றுதான் தோன்றுகிறது.
 சில்லறை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு வெளிப்படையான எதிர்ப்புத் தெரிவித்திருக்கும் ஆளும் கூட்டணிக் கட்சிகள், வாக்கெடுப்பில் எதிர்த்து வாக்களிக்கக் கூடும் என்பது எதிர்க்கட்சிகளின் எதிர்பார்ப்பு. அப்படியே அவர்கள் எதிர்க்காவிட்டாலும், குறைந்தபட்சம் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் புறக்கணித்து  அரசைக் காப்பாற்றக்கூடும். அதுவும்கூட அரசுக்குப் பின்னடைவுதானே என்பதும், அப்படிச் செய்வதால், திமுக, சமாஜ்வாதி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி போன்ற மாநிலக் கட்சிகளின் சில்லறை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டுக்கான எதிர்ப்பு போலித்தனமானது என்பது வெளிச்சம் போடப்படும் என்பதால், அவர்கள் அரசுக்கு எதிராக வாக்களித்துவிட மாட்டார்களா என்பதும்கூட எதிர்பார்ப்பாக இருக்கலாம்.
 விதி எண் 184-ன் படி விவாதத்துக்குப் பிறகு வாக்கெடுப்பு நடத்தினால், மத்திய அரசுக்கு தோல்வி ஏற்பட்டுவிடும் என்கிற நிலைமை இருப்பதுபோல ஒரு தோற்றம் காட்டப்படுகிறதே தவிர, நிலைமை அவ்வாறாக இல்லை. சிலருக்கு "விருந்தும்', சிலருக்கு "மருந்தும்'  ஏற்கெனவே கொடுக்கப்பட்டுவிட்டன. ஆகவே, வாக்கெடுப்பின்போது அவையில் இல்லாமல் வெளியேறும் கட்சிகளும், அரசுக்கு ஆதரவாக வாக்களிக்கப் போகும் கட்சிகளும் இந்த வாக்கெடுப்பை அரசுக்குச் சாதகமாகவே அமையச் செய்யும். தனது பாசறையை முதலில் ஒருமுறை சோதித்துப் பார்த்துக்கொள்வதற்கான காலஅவகாசம் பெறுவதற்காகவே, தற்போது வாக்கெடுப்புக்கு சம்மதம் தெரிவிக்காமல் அரசு இழுத்தடிக்கிறதே தவிர, வாக்கெடுப்புடன் கூடிய விவாதத்துக்கேகூட காங்கிரஸ் கட்சி நிச்சயம் சம்மதிக்கும் என்று நம்ப இடமிருக்கிறது.
 மத்திய அரசுக்கு இதனால் இன்னொரு ஆதாயமும் உண்டு. குளிர்காலக் கூட்டத்தொடரையும் முடக்குவதன் மூலம் எதிர்க்கட்சிகள் மீது மக்களுக்குள்ள வெறுப்பை அதிகப்படுத்த முடியும். அத்துடன், வாக்கெடுப்பு அரசுக்கு ஆதரவாக முடியும்போது, "இதற்காகவா இவ்வளவு நாள் நாடாளுமன்றத்தை முடக்கி வீணடித்தார்கள்?' என்று எதிர்க்கட்சிகளின் மீது மக்களுக்கு எரிச்சல் மேலும் அதிகரிக்கும். அதற்கான தந்திரமாகக்கூட இது இருக்கலாம்.
 சென்ற ஆண்டு, சில்லறை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அரசு அறிவித்தபோது அதைத் தடுத்து நிறுத்தியது, அப்போது மத்திய அரசில் இடம்பெற்றிருந்த திரிணமூல் காங்கிரஸ் மட்டுமே! கூட்டணியை விட்டுத் திரிணமூல் காங்கிரஸ் வெளியேறிய பிறகுதான் மத்திய அமைச்சரவை, சில்லறை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதித்தது.
 சில்லறை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிப்பது அந்தந்த மாநிலத்தின் விருப்பத்துக்கு உரியது. இதில் மத்திய அரசு தலையிட முடியாது என்று கூறியபோது, 10 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் எடுத்த எடுப்பில் ஆதரவு தெரிவித்துவிட்டன. அதன் பிறகு எதிர்க்கட்சிகள் நடத்திய கடையடைப்பு வேலைநிறுத்தம் மிகவும் பலமானதாக இருந்திருந்தால், மத்திய அரசு இந்த விவகாரம் குறித்து தனது முடிவை மாற்றிக்கொண்டிருக்கக்கூடும். ஆனால், உண்மை அவ்வாறாக இல்லை.
 அடுத்ததாக, இந்த விவகாரத்தில் மத்திய அரசு மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப் போவதாக திரிணமூல் காங்கிரஸ் தலைவி மம்தா இரு மாதங்களுக்கு முன்பே தெரிவித்தார். மேற்கு வங்கத்தில் தனது அரசியலை ஸ்திரப்படுத்திக்கொள்ளவே அவர் இந்த நாடகம் ஆடுகிறார் என்று குற்றம்சாட்டிய இடதுசாரிகள், நம்பிக்கை இல்லாத் தீர்மானத்திற்கு ஆதரவு தரமாட்டோம் என்று அறிவித்தனர், சரி. ஆனால், மற்ற கட்சிகள் ஏன் அவருக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை?
 நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரக்கூடிய எண்ணிக்கை பலம் பாஜகவுக்கு இருக்கும்போது, அவர்கள் ஏன் வாக்கெடுப்புடன் கூடிய விவாதத்தைக் கேட்டு, நாடாளுமன்றத்தை முடக்கிக் கொண்டிருக்க வேண்டும்? நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோல்வி கண்டால் எதிர்க்கட்சிகளுக்கு அவமானம். ஆனால், விதிஎண் 184-ல் தோற்றுப்போனால், அது வெறும் அன்னிய நேரடி முதலீட்டில் கட்சிகளிடையே கருத்துமாறுபாடு மட்டுமே! ஒருவேளை தீர்மானம் நிறைவேறினாலும், அதனால் ஆட்சி கவிழ்ந்துவிடப் போவதில்லை. இன்னும் ஆறு மாதத்திற்கு நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவர முடியாத நிலைமையை திரிணமூல் காங்கிரஸின் தீர்மானத்தை ஆதரிக்காமல் எதிர்க்கட்சிகள் ஏற்கெனவே ஏற்படுத்திக் கொடுத்துவிட்டன.
 ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் ரட்சகர்கள் வேறுயாருமல்ல, எதிர்க்கட்சிகள்தான். அதிலும் குறிப்பாக, பாஜகவும் இடதுசாரிக் கட்சிகளும்!

Monday, November 12, 2012





இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!

தீபங்களை வரிசையாக ஏற்றி வைத்து வணங்குதல் தீபாவளி ஆகும். 
தீபம் என்றால்வெளிச்சம். 
ஒவ்வொருத்தர் மனதிலும் ஒரு சில இருட்டு உள்ளது. 
அகங்காரம், பொறாமை, தலைக்கணம் போன்ற எதையாவது ஒன்றை தூக்கிப்போட வேண்டும். ஒரு தீய குணத்தையாவது  எரித்துவிட வேண்டும்.
நாம் புனிதமாவதற்குத்தான் வெடி வெடிக்கிறோம். 
அதாவது சில பொருட்களை அழிப்பதற்கு அதனை கொளுத்துகிறோம் அல்லவா! அதுபோன்றுதான் நமது மனதில் இருந்த தீய எண்ணங்களை வெடி வெடிப்பது போல் சிதறடித்துவிட வேண்டும் என்பதற்காக வெடி வெடிக்கிறோம்.
 











Saturday, November 10, 2012



நல்ல தொழிற்சங்கமும் நாமும்

    ஒரு நல்ல முதலாளி, நல்ல அரசு, நல்ல நிர்வாகம் நேர்மையான ஊழியர்கள், இருக்கும் வரை எந்த ஒரு தொழிலும், துறையும் யாதொருவிதமான சிக்கலுமின்றி சிறப்பாகவே இயங்கும், வளரும்.  காலப்போக்கில் மேற்கண்ட முறைமைகள் எல்லாம் தேய்ந்து வீணாகிய போதுதான் தொழிலாளிக்கு சிக்கல்கள் உருவானது.  தொழிற்சங்கம் அவசியமாயிற்று.
இந்திய தொழிற்சங்க வரலாற்றில் தொலைபேசித் தொழிலாளிக்கென மிகப் பெரிய பங்கு பாத்திரம் உண்டு. இன்றைக்கும் அன்றைய 68 போராட்ட தியாகத்தைக் கொண்டாடுகின்ற தொழிலாளியாக நமது தொழிலாளர்கள்தான் இருக்கின்றார்கள். பல பிரதம அமைச்சர்களை. மந்திரிகள் பலரை நேருக்கு நேர் சந்தித்து தொலைபேசித் தொழிலாளியின் பிரச்சனைகளைத் தீர்ப்பதில் தலையாய பங்கு வகித்த சங்கம் நமது N F T E சங்கம்.
இது போன்று அரசுக்கு மிகப் பெரிய சவாலாக இருந்த நமது சங்கத்தை உடைப்பதற்காக மத்தியில் ஆளுகின்ற அரசுகள்  ஆட்சி  மாறுகின்ற ஒவ்வொரு முறையும் அதற்கு சார்புடைய தொழிற்சங்கங்களை உருவாக்கிக் கொண்டது.  அரசியல் ரீதியாக, சாதீய ரீதியாக, கேடர் ரீதியாக தொழிலாளியைப் பிரித்து, தொழிற்சங்க பலத்தை குறைத்து பலவீனப்படுத்தி வைத்திருக்கிறது.   
சூழ்ச்சிதான் நடக்கிறது. நாமும் பிரிந்துதான் கிடக்கிறோம். இதைத் தெளிவாய் உணர்ந்த பின்னும் தொழிலாளி வர்க்கத்திடையே விட்டுக் கொடுக்கவோ, பரஸ்பரம் புரிதலை உருவாக்கிக் கொள்ளவோ பொது எதிரியை அடையாளப்படுத்தி அவர்களுக்கு எதிராக ஒன்றுபட்ட போராட்டத்தை உருவாக்கவோ எந்த வித முயற்சியும் எடுக்கப்படாமல், பரஸ்பரம் ஒருவரை ஒருவர் குறை கூறிக்கொள்வது, சேற்றை வாரி இறைப்பது என்ற போக்கு நீடிப்பதால் தொழிலாளி வர்க்க்ம் நெருக்கடிக்கு உள்ளாகி ஆளுவோரும் அதிகார வர்க்கமும இன்றைக்கு வளம் பெற்று நிற்கிறது,  
இந்த காலத்தில்தான் நமது தொழிற்சங்கமும் மேற்கண்ட காரணங்களுக்கெல்லாம் ஆட்பட்டு, அதே நேரத்தில் பொலிவிழக்காமல் வாழும் சங்கங்களில் ஒன்றாக திகழ்கிறது.   தலைவர்கள் குப்தா, ஞானையா, ஜெகன் பணியாற்றிய காலங்கள் இன்றைக்கும் பொற்காலங்களாக எண்ணிப்பார்க்கப்படுகிறது.  அந்தக் காலங்களில் நாம் அடைந்த பல முன்னேற்றங்களில் பலவற்றை இன்றைக்கு இழந்திருக்கிறோம்.  
அதைத் தொட்ர்ந்து தலைவர்கள் முத்தியாலு, ஆர்.கே, தமிழ்மணி, மாலி ஆகியோரின் சிறந்த பணிச் சேவைகளை தமிழ் மாநிலத்திற்கு அவர்களின் பணி ஓய்வுக் காலம் வரை நாம் பயன்படுத்திக் கொண்டோம்.

ஒவ்வொரு மாவட்டத்திலேயும் சீனியர் தலைவர்கள் ஓய்வு பெற்றிருந்தாலும் தோழர்கள் சேது, R.V, மாலி ஜெயபால் ஆகியோர்கள் அந்தந்தப் பகுதிகளின் பிதாமகர்களாக செயல்படுகிறார்கள்.

நமது இயக்கத்தை முன்னெடுத்துச் செல்ல தொடர்ந்து நாம் ஒற்றுமைப் பாதையைக் கைக் கொள்ள வேண்டும்.  
   
    அங்கீகாரத் தேர்தலில் அகில இந்திய அளவில் நாம் தோற்றிருந்தாலும் தமிழகத்தில் தொடர்ந்து உறுப்பினர் எண்ணிக்கையை குறையாது தக்க வைத்திருக்கின்றோம் என்பதை உணர்ந்திட வேண்டும்.  இதற்கு முழுமுதற் காரணம் நமது மாநிலச் செயலரின் தொய்வில்லாத சலியாத உழைப்பே, அணுகுமுறையே!

    நமது மாநிலச் செயலர் தோழர் பட்டாபியின் செயல்பாடு அதாவது, தோழமையோடு பழகும் பாங்கு, எளிமையான வாழ்வியல் முறை, எந்த எதிர்பார்ப்புமில்லா தியாகச் செயல்பாடு, எவர் கருத்துக்கும் மரியாதை கொடுக்கும் பாங்கு, எதிர்க் கருத்தை மதித்து நடக்கும் பண்பு, சாதீயச் சிந்தனையில் மூழ்காத, அதே நேரத்தில் கொண்ட அரசியல் கொள்கையில் பாதை மாறாத/உறுதி குலையாத நேர்மை தவறாத அணுகுமுறை ஆகியவற்றை  இம் மாநாட்டிலும் நீட்டிக்கச் செய்வோம்.
நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை நாமே முடிவு செய்வோம்.
வாழ்த்துக்கள் தோழர்களே!

அன்புடன்,
எஸ். சிவசிதம்பரம்,
மாநில துணைத் தலைவர்,
பட்டுக்கோட்டை.

Friday, November 9, 2012

சரிதானே!

     மனம் திறந்து பேசுங்கள்!    
மனதில் பட்டதையெல்லாம் பேசாதீர்கள்!
சிலர் புரிந்து கொள்வார்கள்.   சிலர் பிரிந்து செல்வார்கள்.

சிவப்பு மனிதனுக்கும் நிழல் கருப்புதான்!
கருப்பு மனிதனுக்கு இரத்தம்  சிவப்புதான்.
உள்ளங்களில் இல்லை வாழ்க்கை!     மனிதா!
எண்ணங்களில் உள்ளது வாழ்க்கை!

Tuesday, November 6, 2012

ஒப்பந்த ஊழியர்களுக்கு போனஸ் 

நமது தஞ்சை மாவட்ட கேபிள் காண்ட்ராக்ட் ஒப்பந்த ஊழியர்களுக்கு இந்த ஆண்டு போனஸ் ரூபாய் 2000 வழங்கப்பட்டு விட்டது. 
அதைப்போலவே ஹவுஸ் கீப்பிங்  ஊழியர்களுக்கு ரூபாய் 1500 மற்றும் ஹவுஸ் கீப்பிங் செக்யூரிட்டி ஊழியர்களுக்கு ரூபாய் 2000 -ம் விரைவில் வழங்கப்படும் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கின்றோம். 

தீபாவளிக்கு முன்பாகவே வழக்கம் போல் வழங்கிய  BSNL ஒப்பந்ததாரருக்கும், முயற்சி எடுத்த TMTCLU மாவட்டச் சங்கம் மற்றும் NFTE மாவட்டச் சங்கத்திற்கும் நமது நெஞ்சார்ந்த நன்றிகள். 

தோழமையுடன்,  
கே. கிள்ளிவளவன், 
மாவட்டச் செட்யாளர், 
TMTCLU , தஞ்சாவூர்.

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR