தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Monday, April 30, 2018

மாவட்டச் செயலர் மடல்:

உலக மே தின தியாகிகளுக்கு 
வீர வணக்கம் செலுத்துவோம்!
=======================================
அருமைத் தோழர்களே!
                       அனைவருக்கும் வணக்கம்! உங்களுக்கு எனது புரட்சிகரமான மே தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நாளைய தினம் உலகமெங்கும் 128 வைத்து  மே தினத்தை தொழிலாளி வர்க்கம் கொண்டாடுகிறது.  நீங்களும் எல்லா இணைப்பகங்களிலும், கிளைகள்தோறும் செங்கொடி ஏற்றி, தியாகிகளுக்கு அஞ்சலியையும், வீர வணக்கத்தையும் செலுத்துங்கள்.   மே தின வரலாறை, தியாகத்தை எடுத்துச் சொல்லுங்கள்.
                    எட்டு மணி நேர வேலை என்பதும், தொழிலாளருக்கான சலுகை என்பதும் அரசுப் பணிகளிலும், ஒரு சில நிறுவனங்களிலும் தான் இருக்கிறது. மற்றபடி தனியார் கடைகள், கார்ப்பரேட் நிறுவனங்கள் போன்றவற்றில் 10 மணி நேரத்திற்கு மேல் வேலை என்பது இன்னும் மாறவில்லை.    வார ஓய்வு, விடுமுறை நாள், லீவு, அட்வான்ஸ், கடன் போன்றவை இல்லாமல்தான் பல தொழிலாளர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். 
           மத்திய, மாநில அரசாங்கங்களும், நமது  மக்களை, தொழிலாளர்களை, விவசாயத் தொழிலாளர்களை தொடர்ந்து வஞ்சித்து வருகிறது. மக்களின்  கோரிக்கைகள் எல்லாம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. 
      நமது துறையில் சம்பளக் கமிஷன், BSNL ஐப் பாதிக்கும் துணை டவர் நிறுவனம் அமைப்பு போன்ற கோரிக்கைகள் எவ்வளவோ போராட்டங்கள் நடத்தியும் இன்னும் தீராமல் இருக்கிறது. 
  அவைகளை தீர்க்க வேண்டுமானால் முன்னிலும் துடிப்பாக நமது செயல்பாட்டை முடுக்கி விட வேண்டும்.  அத்தகைய செயலுக்கான முனைப்பை, உற்சாகத்தை, செயலூக்கங்களை உருவாக்கும் முயற்சியை ஏற்படுத்த இந்த நன்னாளில் சபதமெடுங்கள்.

மே தின தியாகிகள் நாமம் வாழ்க!
NFTE ஜிந்தாபாத்!!

தோழமையுடன்,
கே. கிள்ளிவளவன்,
மாவட்ட செயலர்.       

Sunday, April 29, 2018

உலக உழைப்பாளர் தினம்
எஸ். சிவசிதம்பரம்.

உழைக்கும் வர்க்கத்தின் விடியலுக்காக போராடி உயிர்நீத்த  தியாகிகளுக்கு வீர வணக்கம் செலுத்தும் நாளாக நாம் மே தினத்தை கொண்டாடுகிறோம். 
ஆரம்பத்தில் உலக நாடுகள் பலவற்றிலும் தொழிலாளர்கள் அதிக நேரம் வேலை வாங்கப்பட்டு கசக்கிப் பிழியப்பட்டனர். இதை எதிர்த்து இங்கிலாந்து, பிரான்ஸ், ஆஸ்திரேலியா, ரஷ்யா, அமெரிக்கா  போன்ற நாடுகளில் போராட்டங்கள் நடைபெற்றது. 
1856ல் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 8 மணி நேர வேலை போராட்டம் வெற்றி பெற்றது.  இதுதான் தொழிலாளி வர்க்கப் போராட்டத்தின் தொடக்கமாக கருதப்பட்டது.
இதைத் தொடர்ந்து அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள தொழிலாளர் இயக்கங்களை இணைத்து “அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பு” என்ற இயக்கம் உருவாக்கப்பட்டது. இவ்வியக்கம் 8 மணி நேர வேலை கோரிக்கையை முன்வைத்து தொடர்ந்து போராட்டங்களை  நடத்தியது. அதோடு மே 11886 அன்று நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு அறைகூவல் விடுத்தது. இவ்வியக்கமே மே தினம் பிறப்பதற்கு காரணமாகவும் அமைந்தது.
அமெரிக்காவில் உள்ள சிகாகோ, நியூயார்க், பால்டிமோர் போன்ற நகரங்களில் உள்ள 12000 க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் பணியாற்றிய 3 1/2 லட்சம் தொழிலாளர்கள் பங்கேற்றனர்.
தொழிலாளர்களின் எழுச்சிமிக்க வேலை நிறுத்தத்தினால், அமெரிக்க பெரு நிறுவனங்கள் மூடப்பட்டன. இரயில் போக்குவரத்து நடைபெறவில்லை. வேலை நிறுத்தத்தில் பங்கேற்ற தொழிலாளர் ஊர்வலங்கள் அமெரிக்காவை உலுக்கியது. மிச்சிகனில் மட்டும் 40,000 தொழிலாளர்களும், சிக்காகோவில் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் கலந்து கொண்டனர்.
அதற்குப் பின் மே 3 ம் தேதி 3000 பேர் திரண்டு சிகாகோவில் உள்ள ஒரு நிறுவனத்தின் வாயிலில் கண்டனக் கூட்டத்தை நடத்தினர். இங்கு  கலவரம் ஏற்பட்டு காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு 4 பேர் பலியானார்கள்.
அடுத்த நாளே மே 4 ம் தேதி ஹே மார்க்கட் சதுக்கத்தில் 2500 பேர் பங்கேற்று அமைதியாக கண்டனக் கூட்டம் நடத்தினர்.  அப்போது காவல் துறையினர்  கலைந்து செல்லுமாறு கூட்டத்தினரை விரட்டியடித்தபோது அங்கு வெடிகுண்டு வீசப்பட்டது. இதில் ஒரு காவலர் பலியானார்.
பின்னர் போலீசார் கூட்டத்தினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தித் தொழிலாளரைத் தாக்கினர். அத்துடன் தொழிலாளர் தலைவர்களை கைது செய்து வழக்கும்  தொடுத்தனர்.  இந்த வழக்கு ஜூன் 211886 அன்று துவங்கியது. 7 பேருக்கு தூக்குத் தண்டனை வழங்கப்பட்டது. இந் நிகழ்வு ஹேமார்க்கெட் படுகொலை என அழைக்கப்படுகிறது. இந்த நிகழ்வினை ஒட்டி‍ அந்த ஹேமார்க்கெட் சதுக்கத்தில் நினைவுச் சின்னம் ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது.


நவம்பர் 11, 1887 அன்று தொழிலாளர் தலைவர்கள் ஆகஸ்ட் ஸ்பைஸ், ஆல்பேர்ட் பார்சன்ஸ், அடொல்ஃப் ஃபிஷர், ஜோர்ஜ் ஏங்கல்  ஆகியோர் தூக்கிலிடப்பட்டனர். நவம்பர் 13, 1887 அன்று நடைபெற்ற இறுதி ஊர்வலத்தில் அமெரிக்க தேசமே அணி திரண்டது. நாடு முழுவதும் 5 லட்சம் பேர் இவர்களது இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டதோடு, அமெரிக்கா முழுவதும் கறுப்பு தினமாக அனுஷ்டிக்கப்பட்டது.
தொழிலாளர்களின் சக்தியோடு மக்கள் சக்தியும் சேர்ந்தவுடன் அரசாங்கத்தால் ஒன்றும் செய்ய முடியவில்லை.  வேறு வழியில்லாமல் அது பணிந்தது.
1889 ஜூலை 14ல் பிரான்ஸ் 14 நாடுகளைச்  சேர்ந்த 400 முக்கிய உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள். அதில் ஒரு நாளைக்கு 8 மணி நேரம் தான் வேலை நேரமாக வரையறுக்க வேண்டும் என்ற மசோதா  நிறைவேற்றப்பட்டது. காரல்மார்க்ஸ் அவர்களின் அறிவுறுத்தல்படி 1990 மே 1 அன்றுதான் ஐ.நா. சபை மே 1 ஐ உலக தொழிலார்கள் தினமாக அறிவித்தது. அமெரிக்க சரித்திரத்தில் போட்டி, பொறாமை போன்ற பல காரணங்களால் தனித்தனியே பிரிந்து கிடந்த தொழிலாளர்கள் அனைவரும்  நாம் அனைவரும் ஒன்று என்று உணர்ந்து இணைந்த நாள்தான்  மே 1.
அமெரிக்க தொழிலாளர்களின் 8 மணி நேர வேலைக்கான போராட்டமும், சிகாகோ தியாகிகளின் தியாகமும்தான் இன்றைக்கு மே தினமாக - உழைப்பவர் தினமாக நம்முன் நிற்கிறது.
 இதன் பின்னர் எல்லா நாட்டிலும் உழைக்கும் மக்கள் மே முதல் நாளை 8 மணி நேர வேலை நேரத்தை கோரிக்கையாக வைத்து‍ பேரணிகளும் ஆர்ப்பாட்டங்களும் நடத்த வேண்டும் என்று  கம்யூனிஸ்ட் அகிலம் வேண்டுகோள் விடுத்தது. அன்றிலிருந்து‍ மே முதல் நாள் தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கான நாளாக அனுசரிக்கப்பட்டு‍ வருகிறது.
இந்தியாவில் சென்னை மாநகரில் முதன் முதலில் தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டது. பொதுவுடைமைவாதியும் தலைசிறந்த சீர்திருத்தவாதியும் ஆன தோழர். ம. சிங்காரவேலர் அவர்கள்  1923 -இல் சென்னை உயர்நீதிமன்றம் அருகே உள்ள கடற்கரையில் தொழிலாளர் தின விழாவைக் கொண்டாடினார்.
உழைப்பவர்கள் வாழ்க்கையில்  ஏற்பட்ட  மிகப் பெரிய மாற்றம்தான்  8 மணி நேர வேலை, 8 மணி நேர உறக்கம், 8 மணி நேர கேளிக்கை என்பது. 
இந்த மாற்றம் வரவில்லையென்றால் மக்கள் செத்து சுண்ணாம்பாய்  போயிருப்பார்கள்.
இந்த வெற்றிக்குப் பிறகுதான் ஜூரிச் நகரத்தில்  நடந்த முதல் மாநாட்டில்   ஒரு தீர்மானத்தை கொண்டு வந்தார்கள்.
அதாவது மே தினம் என்பது 
முதலாளித்துவச் சுரண்டல்,  
அடிமைத்தனம்,
வர்க்க வேறுபாடுகள் 
இவைகளை  அழித்தொழிப்பதற்காக போராடும் நாள் என்று தீர்மானிக்கிறது. 

மே தினம் கடைபிடிக்கப்பட்டு ஆண்டுகள் 128 ஐக் கடந்து விட்டது. அதற்குப் பின் பல நாடுகளின்  விடுதலை, எண்ணற்ற முன்னேற்றங்கள், விஞ்ஞான வளர்ச்சிகள், கண்டுபிடிப்புகள், உழைக்கும் வர்க்கத்திற்கான உரிமைகள் நிறைய கிடைக்கப்பெற்று உலகம் அசுர வளர்ச்சியைக் கண்டுள்ளது.  இதில் யாதொரு சந்தேகமுமில்லை.
இப்படிப்பட்ட முன்னேற்றம் ஒருபுறம் ஏற்பட்ட போதிலும் மறுபுறம் பார்த்தால்  போட்டி, பொறாமை, சுரண்டல், நாட்டின் வளங்களை சூறையாடுதல்,   நல்ல ஆட்சிகளை நாசமாக்குதல், பல நாடுகளின் தலைவர்களை  கொலை செய்தல், நவீன முறையில் பிற நாட்டு வளங்களைக் கொள்ளையடித்தல்  போன்றவைகளும் வளர்ந்துள்ளது.  ஒரு சில நாடுகள்   முன்னேறியிருக்கும். சில நாடுகள் முன்னேற்றத்தை நோக்கி போய்க் கொண்டிருக்கும். இன்னும் சில நாடுகள் ரொம்பவும் பின் தங்கியிருக்கும்.  இதுதான் சர்வதேச நிலைமை.

நமது நாட்டைப் பொறுத்தவரை என்ன நிலைமை என்பதைப்  பார்ப்போம்!  பாரத தேசம் பழம் பெரும் தேசம்!  நீரதன் புதல்வர் இந் நினைவகற்றாதீர்!!  இது பாரதியின் வரிகள்.
அவ் வரிகளுக்கு ஏற்பவே நமது நாடும் ஜனநாயக நாடாக    உள்ளது என்பதில் எந்தவிதமான சந்தேகமுமில்லை.  ஜனங்களின் மனங்களை நல்வழிப்படுத்தக் கூடிய, மிகச் சிறந்த  காவியங்களும், காப்பியங்களும், ஆன்மீக, நாத்திக வழியிலான நம்பிக்கை தரும் கருத்துக்களும், மருத்துவக் குறிப்புகளும்  உலகிலேயே நமது நாட்டில்தான் அதிகம். தேசத்தை ஜனநாயக முறைப்படி நடத்திச் செல்ல, அண்ணல் அம்பேத்கரால் உருவாக்கப்பட்ட  அற்புதமான சட்ட நடைமுறைகள் உள்ள நாடும் நமது இந்திய தேசமே.  அதிலும் உலகப் பொதுமறையான திருக்குறள், உலகிலேயே சிறந்த செவ்வியல் மொழிகளில் ஒன்றான தமிழ் மொழி உருவான  மாநிலமாக தமிழகம் இருப்பது வெகு சிறப்பு.

ஆனால் சுதந்திரத்திற்கு பின்னதாக வந்த ஆட்சியாளர்கள் நாளடைவில் மோசமான ஆட்சியாளர்களாகவும், சொந்த தேசத்தின் வளங்களையே சூறையாடுபவர்களாகவும் மாறிவிட்டார்கள்.
இன்றைக்கு காசுக்காக யார்  காலில் வேண்டுமானாலும் விழலாம் என்ற நிலையும் உருவாகிவிட்டது. வெளிநாட்டு, உள்நாட்டு கார்ப்பரேட்டுகளுக்கு அபரிமிதமான சலுகையும், வங்கியில் கடன் வாங்கி ஏப்பம் விடுபவர்களின் மீது நடவடிக்கை எடுக்க திராணியில்லாதவர்களாகவும் அல்லது நடவடிக்கை எடுக்க மனமில்லாதவர்களாகவும் நம்மை மத்தியில் ஆளும் ஆட்சியாளர்கள்   மாறிவிட்டார்கள். மக்களுக்கு மத, இன, மொழி ஆகியவற்றின் பேரால் வெறியூட்டி  கலவரத்தை ஏற்படுத்துகிறார்கள். இம்மாதிரி எவ்வளவோ சொல்லிக் கொண்டே போகலாம். உலக சமாதானத்துக்கு பெயர் போன நம்ம நாடு, பாதுகாப்புக்குத்தான் நம்ம வருமானத்துல அதிகத் தொகையை செலவு செய்கிறதென்றால்  நாடு போகும்  போக்கை தீர்மானிக்கலாம்.

மக்களை எந்நேரமும் போதை அல்லது மாயையிலேயே வைத்திருக்கும் கலையை இன்றைய அரசியல் வாதிகள் நன்கு கற்று வைத்திருக்கிறார்கள்.  
தானாய் எல்லாம் மாறும் என்பது பழைய பொய்யடா என்ற பட்டுக்கோட்டையாரின் கவிதை வரிகள்தான் இந்த நேரத்தில் நமக்கு நினைவில் வருகிறது. தானாய் எதுவும் மாறாது.
நாம்தான் மாற வேண்டும். நம்மால் எதையும் மாற்ற முடியும் என்ற சிந்தனைதான் நம்மை, நமது மக்களை ஏன் தேசத்தையே காப்பாற்ற முடியும் என்பதை உணர்வோம்.  அதற்காக போராடுவோம்.

நேர்மையான கோரிக்கைகளுக்காக எவர் போராடினாலும் அவர்களுக்கு பக்க பலமாக, உறுதுணையாக இருப்போம். அவர்கள் எந்தக் கட்சி, எந்த அமைப்பாக இருந்தாலும் துணை நிற்போம். 
மனிதாபிமானம் போற்றுவோம்!
பட்டுக்கோட்டை கோட்டத்தில் காசாங்காடு தொலைபேசி இணைப்பகத்தில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றும் 
தோழர். முருகேசன் நேற்று விபத்துக்குள்ளானார்.

              28-04-18  அன்று தொலைபேசி பழுது பார்த்துக்கொண்டிருந்தபோது
தவறி கீழே விழுந்து விட்டார். மதில் சுவற்றில் விழுந்ததால் இடுப்புக்கு கீழே உணர்வு இல்லாத நிலையில் பட்டுக்கோட்டை அரசு மருத்துவ மனைக்கு கொண்டு வரப்பட்டார். பிறகு அங்கிருந்து தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு செல்வகுமார், குணசேகர், குமார், துணைக்கோட்ட அதிகாரி ஞானசேகர் ஆகியோர் துணையோடு எடுத்துச் செல்லப்பட்டு   சிகிச்சை பெற்று வருகிறார்.  TMTCLU மாவட்டச் செயலர் தோழர். கலைச்செல்வன் அவர்களும் முன்னதாகவே மருத்துவமனை சென்று, கூடவே இருந்து ஆவன செய்து வருகிறார்.

             செய்தி கேள்விப்பட்டவுடன் நமது முதன்மைப் பொது மேலாளர் திரு. C.V. வினோத் அவர்கள்  இன்று காலை மருத்துவமனை சென்று முருகேசனைப் பார்த்து ஆறுதல் கூறி, 5000 ரூபாய் நிதி உதவி செய்து,    துறை மூலம் இயன்றதை செய்வேன் என்றும்  கூறிச் சென்றார்.  
    PGM  அவர்களுடன்  TMTCLU மாவட்டச் செயலர் தோழர். கலைச்செல்வன் இன்றும்  சென்று தோழரைப் பார்த்து ஆறுதல் கூறினார். 
      மாவட்டச் செயலர் தோழர். கிள்ளிவளவன் ஊரில் இல்லாததால் அவரும் தொலைபேசி மூலம் பேசி விபரங்களை அறிந்தார்.  ஒப்பந்ததாரர் திரு. ராமச்சந்திரன் அவர்களிடம் பேசி முருகேசனுக்கு நிதியுதவி கோரியிருக்கிறார். அவரும் தருவதாக உறுதி கூறியுள்ளார்.

தாயுள்ளத்தோடு 5000 ரூபாயை மனதார அள்ளிக் கொடுத்திருக்கிறார் நமது பொது மேலாளர் அவர்கள்.

பட்டுக்கோட்டை ஆஸ்பத்திரியில தோழர்கள் ரூபாய் 2500/- நிதி தந்திருக்கிறார்கள்.

ஒப்பந்ததாரரும் நிதியுதவி செய்யவிருக்கிறார். 

உங்களுக்கெல்லாம் மாவட்டச் சங்கத்தின் சார்பாக நெஞ்சு நிறை நன்றியை உரித்தாக்கிக் கொள்கிறோம்! 

உயர் அதிகாரி ஒருவர், ஒரு ஒப்பந்த ஊழியரை  வந்து பார்ப்பதே அரிதான இந்தக் காலத்தில் தனியொருவராக வந்து பார்ப்பதும், பெரிய தொகையை நிதியளிப்பதும், அதுவும் பலமுறை என்பது,  நம் காலத்தில் PGM அவர்களின் வருகைக்குப் பின்னர்தான். உதவி செய்யும் மனப்பான்மையை, நல் உணர்வை ஊட்டி வளர்க்கும் நீங்கள் " நல்லா இருக்கணும் " என்று வணங்கி வாழ்த்தி மகிழ்கிறோம்!

தோழமையுடன்,
NFTE-BSNL ,
தஞ்சை மாவட்டச் சங்கம்.

Friday, April 27, 2018


அதிக லேண்ட் லைன் மற்றும் சிம் கார்டு விற்பனையில் சாதனை புரிந்த தோழர்கள் 
மாவட்ட நிர்வாகத்தால் பாராட்டப்பட்டனர்.

25-04-18 அன்று DGM திரு. விஜயகுமார் அவர்களுக்கு நடைபெற்ற பணி நிறைவு பாராட்டு விழாவில் கீழ்க்கண்ட தோழர்களுக்கு ஷீல்டு, 
பாராட்டுச் சான்றிதழ் தந்து, 
சால்வை அணிவித்துப் பாராட்டப்பட்டனர்.


பாராட்டுப் பெற்ற தோழர்கள்
==============================
 P.பாலசுப்பிரமணியன் வடசேரி் (லேண்ட் லைன் ) 
C.பத்பநாதன் திருவையாறு (SIM SALES)


M.இராஐந்திரன் மாரியம்மன் கோவில்

NFTE தஞ்சை மாவட்டச் சங்கம் 
பாராட்டுப் பெற்ற தோழர்களை உளமார வாழ்த்தி மகிழ்கிறது.

Wednesday, April 25, 2018


தமிழ் மாநில செயற்குழு அழைப்பிதழ் 
==========================================================






பணி நிறைவு பாராட்டு விழா
==============================
குடந்தை மாவட்டத் தலைவர் 
தோழர். கணேசன் அவர்களின் 
பணி நிறைவு பாராட்டு விழா 
குடந்தையில் வெகு சிறப்பாக நடைபெற்றது. 
தலைவர் தோழர். ஜெயபால், மாநிலச் செயலர் தோழர். நடராஜன்,
நமது மாவட்டச் செயலர் தோழர். கிள்ளிவளவன்  மற்றும் பல தோழர்கள்  பங்கேற்று வாழ்த்தினார்.

குடந்தை மாவட்டச் சங்கத்தின் செயலூக்கம் பெற்ற தலைவர் தோழர். கணேசன். 
அவரது பணி நிறைவுக் காலம் சிறந்தோங்க 
தஞ்சை மாவட்டச் சங்கம் மனதார வாழ்த்தி மகிழ்கிறது.


Tuesday, April 24, 2018

பணி நிறைவு பெறுகிறார்! 
======================

மன்னார்குடியில் AOS ஆக பணியாற்றி வரும் 
தோழியர் S. நீலாவதி அவர்கள் 
30-04-18 அன்று ஓய்வு பெறுகிறார்.

அவரது பணி நிறைவு காலம் 
நிம்மதியாகவும், மகிழ்ச்சியாகவும் பயணிக்க
 NFTE தஞ்சை மாவட்டச் சங்கம் 
வாழ்த்தி மகிழ்கிறது.
பணி நிறைவு பாராட்டு விழா 
தோழர். R. ஜெம்புநாதன் TT / TNJ
அவர்களின் பணி நிறைவு பாராட்டுவிழா 
22-04-18 அன்று தஞ்சையில் சிறப்பாக நடைபெற்றது. 
மாவட்டச் செயலர் தோழர் K. கிள்ளிவளவன், 
மாவட்டத் தலைவர் தோழர். T. பன்னீர்செல்வம்,
 மாவட்டச் சங்கப்  பொறுப்பாளர்கள் 
கலைச்செல்வன், ஜோதிவேல் 
மற்றும் பல தோழர்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.


Sunday, April 22, 2018

NFTE - BSNL 
தஞ்சை மாவட்டம்.
=================
இரங்கல் செய்தி 

=====================================
நமது தஞ்சை மாவட்டத்தின்  
BSNL  துணைப்  பொது மேலாளராக 
சிறப்பாக பணியாற்றி ய்வு பெற்ற 
திரு. S. ராமச்சந்திர அய்யர் அவர்கள்  
இன்று ( 22-04-18 ) காலை இயற்கை எய்தினார் 
என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன்
தெரிவித்துக் கொள்கிறோம்.

 24-04-18 காலை தஞ்சாவூர்  அவரது இல்லத்திலிருந்து
உடல் எடுத்துச் செல்லப்பட்டு நல்லடக்கம் 
செய்யப்படும் என்பதையும் அறிவிக்கின்றோம்!

அவர் பணியில் இருந்த காலத்தில் 
நமது தொழிற்சங்கத்துக்கு பேருதவியாக இருந்தார்.
பல பிரச்சினைகளை தாயுள்ளத்தோடு பரிசீலித்து 
தீர்த்துக் கொடுத்துள்ளார் என்பதை 
இந்த நேரத்தில் நன்றியோடு நினைத்துப் பார்க்கிறோம்!

அவரைப் பிரிந்து வாடும் அவரது 
துணைவியாருக்கும், குடும்பத்தாருக்கும் 
 NFTE தஞ்சைமாவட்டச் சங்கம் தனது 
ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது.


இல்ல முகவரி:
8 வது தெரு,
சுந்தரம் நகர்,
மருத்துவ கல்லூரி சாலை,
தஞ்சாவூர்.

நீங்கா துயருடன், 
கே. கிள்ளிவளவன்,
மாவட்டச் செயலர்.
=============================================

Saturday, April 21, 2018

ஆஷிபா மரணம் - தேசத்தின் துயரம்!

இந்தச் சம்பவம் எல்லோருக்கும் மிகப் பெரிய மனவலியை ஏற்படுத்திவிட்டது.  ஏனென்றால் எல்லோர் வீட்டிலும் குழந்தைகள் இருக்கின்றார்கள்.  குழந்தைகளுக்கு, தான் என்ன சாதி,  என்ன மதம், கடவுள் என்றால் என்ன என்று ஏதாவது தெரியுமா! அவர்களின் மழலை மொழி, பிஞ்சுக் கரங்கள், கொள்ளைச் சிரிப்பு ஆகியவை நமக்கு  தெய்வீகத் தன்மையை, நேச உணர்வையல்லவா அள்ளித்  தருகிறது. குழந்தை ஆசிபாவை இப்படி சிதைத்திருக்கிறார்களே!  அவர்களுக்கெல்லாம்  குழந்தைகள் இல்லாமலா இருக்கும். அவர்களும் இந்திய நாட்டில் பிறந்து, இந்தியக் கலாச்சாரத்தில் வளர்ந்தவர்கள்தானே!
இந்திய நாட்டின்  ஒருமைப்பாடு, பண்பாடு என்பதெல்லாம் பொய்யா! என்ற கேள்விகளுக்கு விடை காண்பதே இந்தக் கட்டுரையின்
நோக்கம்.  

காஷ்மீரத்தில் இக் கற்பழிப்புகள் புதிதல்ல. தொடர் கற்பழிப்புகள் நடைபெற்ற மாநிலம் காஷ்மீர். இதற்கு காரணமான அரசியல் சக்திகள் தண்டனைக்கு ஆளாக்கப்பட்டால்தான் இவைகளை நிறுத்த முடியும். இதற்கு மூல காரணம் பாபர் மசூதி இடிப்புக்கான ரத யாத்திரை அரசியல் மற்றும்   ராமர் கோயில் பெயரால் நடத்தப்பட்ட அரசியல்தான்.  நமது ராணுவத்தினரே ஒரு கிராமத்தில் உள்ள ஆண்களை எல்லாம்  கடத்திவிட்டு அங்குள்ள பெண்களை கற்பழித்திருக்கிறார்கள். ராணுவத்தினர்   மீதும், காவல் அதிகாரிகள்  மீதும் இப்படி கற்பழிப்பு குற்றச்சாட்டுகள் உண்டு.
காஷ்மீரில் ஒரே புதைகுழியில் 900 பிணங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. 
அரசின் உதவியில்லாமல் இதெல்லாம் செய்ய முடியாது. எவ்வித நடவடிக்கையும் இல்லை. 
இம் மாநிலத்தில்தான் இறந்தவர் யார் என்று கூட கண்டுபிடிக்க முடியாது.  இங்கு இன்று வரை 12000 பேர் காணாமல் போயிருக்கிறார்கள்.  இங்கு "காணாமல் போனவர்களின் பெற்றோர்கள் அமைப்பு" என்று ஒரு  இயக்கம் இருக்கிறது என்றால் நிலைமையை யூகித்துக்கொள்ளுங்கள்.
குரூரமான ராணுவக் கெடுபிடிகளால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலையில்தான் காஷ்மீர் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
2009 ல் நிலோபர், ஆயிஷா இருவரும் பாதுகாப்பு படையினரால் கற்பழித்து கொல்லப்பட்டார்கள். இன்றுவரை குற்றவாளிகள் மீது எந்தவொரு நடவடிக்கையும் இல்லை.

காஷ்மீரில் நடக்கும் பிரச்சனைகளை  ஐ.நாவில் எடுத்து வைக்கப்படும் போது, காஷ்மீரில் நடக்கும் கொலைகளை விசாரிக்கவும், அறிக்கைகளை வெளியிடவும் ஒரு தனி அதிகாரியை ஐக்கிய நாடுகள் அவை நியமித்தது.  இந்த அதிகாரி பொறுப்பில் இருந்த கிறிஸ்தோப் ஹெய்ன்ஸ் தனது ஆய்வு அறிக்கையில் என்ன கூறினார் என்றால், "காஷ்மீரில் செயலில் இருக்கும் ஆயுதந்தாங்கிய படைகளின் சிறப்பு அதிகாரம் (AFSPA) மக்களின் அடிப்படை உரிமைகள் அனைத்தையும் பிடுங்கிக் கொள்கிறது. மக்களின் “RIGHT TO LIFE” உயிர் வாழும் உரிமையை முற்றாக மறுத்துவிடுகின்றது. ஜனநாயக நாடு எனச் சொல்லிக் கொள்ளும் ஒரு நாட்டில் இதற்கு எந்த வேலையுமில்லை. இந்த சட்டத்தை நீக்குவதன்  மூலம் அரசு மக்களின் வாழும் உரிமையை மதிக்கின்றது என்ற செய்தியை மக்கள் மனதில் நிலைபெறச் செய்யலாம்" எனக் கூறியுள்ளார். (ஆதாரம்: THE HINDU March 31, 2012)
எந்த அறிக்கையையும் கண்டு கொள்ளாத அரசு இந்த அறிக்கையையும் கண்டு கொள்ளாமல் விட்டு விட்டது.
காஷ்மீர் மாநிலம் மத ரீதியாக பிரிக்கப்பட்டுள்ளது.  காஷ்மீரிகளை எதிரிகளாகவும், அவர்களை அழித்தால்தான்  தன் நாட்டிற்கு நன்மை  என்று உளவியல் ரீதியாக அவர்கள் மாற்றப்பட்டுவிட்டார்கள்.  
அதனால்தான் 8 வயது குழந்தையை சிதைத்துக் கொன்றவர்களுக்கு ஆதரவாக அணி திரள்கிறது,  அங்குள்ள நீதிமன்ற அமைப்புகளும், இந்து ஏக்தா மஞ்சு என்ற ஆர்.எஸ்.எஸ் அமைப்பும். இவர்கள்   நடத்திய  போராட்டத்தில்   வனத்துறை,     தொழில்துறை  அமைச்சர்களும்           பங்கெடுத்திருக்கிறார்கள் என்பதெல்லாம் நமக்கு புதிய செய்திகள்.  இதற்கெல்லாம் அங்குள்ள  ஆயுதப் படையின் அத்துமீறல்களும், அங்கு நடைபெறும்  அரசியல் சூழ்ச்சிகளும்தான் காரணம் என்பதை உணர்ந்தால்தான் இப்பேர்ப்பட்ட தன்மைகளை வேரோடும், வேரடி மண்ணோடும் அகற்ற முடியும்.


உலகிலேயே மிகப் பெரிய வன்முறை எது தெரியுமா? திருப்பித் தாக்க முடியாதவனின் மீது செலுத்தப்படும் வன்முறை தான். பெரும்பான்மையினரால் சிறுபான்மையினர் மீது நடத்தப்படும் வன்முறை அத்தகையது. 10 பேர் சேர்ந்து ஒருவனைத் தாக்குவது கும்பல் மனப்பான்மை தரும் துணிச்சல்தானே தவிர, உண்மையில் அது மிகப்பெரும் கோழைத்தனம், வன்முறையின் உச்சம். அதைவிடக் கொடுமையான வன்முறை, பல ஆண்கள் சேர்ந்து ஒரு பெண்ணை கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்வது. இதையே நாம் கொடுமை என்றால், துள்ளி விளையாடும் சிறுமிகளை பாலியல் வன்புணர்வு செய்பவர்களை மனிதர்களாகவேனும் கருத முடியுமா? ஆனால், அத்தகைய மனித மிருகங்களாகத்தான் இந்துத்துவ சக்திகள் இந்த மண்ணில் நடமாடுகின்றன. சிறுமி ஆசிஃபா-வை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்து, கொடூரமாகக் கொன்ற கொலையாளிகளைப் பாதுகாக்க ஆர்ப்பாட்டங்கள் செய்த இந்துத்துவ - பாஜக சக்திகள் வாழும் இந்த நாட்டில், இனி சிறுபான்மையினரும், பெண்களும் பாதுகாப்பாக வாழ முடியுமா?
இத் தன்மையை உணர்ந்தவர்கள் ஆர்.எஸ்.எஸ். சிடமிருந்தும், சங் பரிவார் கும்பலிடமிருந்து விலகிட வேண்டும்.

இறுதியாக ஜோன்  லிண்டன் எழுதிய வேதனைக் கவிதையின் கடைசிப் பகுதியை மட்டும் உங்களுக்கு படித்துக் காட்டி முடிக்கிறேன் தோழர்களே! 

இரவெலலாம் கனவுகளில்
வந்து போகிறாள் ஆசிஃபா.
முக்காடிடவும், முழங்காலிடவும், 
கன்னத்தில் போட்டுக் கொள்ளவும்
அருவருப்பாய் உணர்கிறது உடல்.
ஊதுபத்தியிலும், கற்பூரத்திலும்,
மெழுகுவத்தியிலும்மணக்கிறது 
ஆசிஃபாவின் குருதி வாசனை.
மந்திரங்களில் ஒலிக்கிறது
அவளது அலறல்.
பிரசாதமாய்க் கிடக்கிறது
அவளது உடல்.


நன்றி நண்பர்களே! மீண்டும் சந்திப்போம்! 

திருவாரூரில்  அனைத்துச் சங்க கூட்டமைப்பின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்.
=======================
SC, ST மீதான வன்கொடுமைச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும் நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்யக் கோரியும், காஷ்மீர் குழந்தை ஆஷிபா படுகொலையினைக் கண்டித்தும் 
20-04-18 அன்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் 40க்கும் மேற்பட்ட தோழர்கள் பங்கேற்றனர்.











Friday, April 20, 2018

காவேரி மேலாண்மை வாரியம்!

காவேரி மேலாண்மை வாரியம் ஏன் அமைக்க வேண்டும்.  
அதை அமைப்பதில் என்ன சிக்கல்?
அதை அமைப்பதால் யாருக்கு  என்ன லாபம்? யாருக்கு என்ன நஷ்டம்?
அதில் தமிழகத்திற்கு என்ன உரிமையிருக்கிறது?
கர்நாடகாவிற்கு என்ன உரிமை இருக்கிறது?
இந்த நான்கைந்து கேள்விகளுக்கு  விடை காண முயற்சிப்பது இந்த காவிரி பிரச்சினையைப் பற்றிய புரிதலுக்கு வழிவகுக்கும்.

இப்போது காவேரி நதியைப் பற்றி மேலோட்டமாக கொஞ்சம் பார்ப்போம்.

காவேரி நதி கர்நாடகாவில் குடகு மாவட்டத்தில்  தலைக்காவேரி என்னுமிடத்தில் 4400 மீட்டர் உயரத்தில் தோன்றுகிறது. 
இது கர்நாடகாவில் 6 மாவட்டங்களையும், தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களையும் கடந்து பூம்புகாரில் கடலில் கலக்கிறது.  
இதன் நீளம் 800 கிலோ மீட்டர். கர்நாடகாவில் 320 கிலோமீட்டரும், தமிழகத்தில் 416 கிலோமீட்டரும், இரு மாநிலத்தின் எல்லையில்  ஒரு 64 கிலோமீட்டரும் செல்கிறது. 
காவிரியில் விழும் இரு அருவிகள் கர்நாடகாவில் சிவசமுத்திர நீர்வீழ்ச்சியும், தமிழகத்தில் ஒகேனக்கல் அருவியும் ஆகும்.  
காவிரிக்கு பொன்னி நதி என்று ஒரு பெயரும் உண்டு.இந்த ஆற்றில் தங்கத் தாது இருப்பதாகவும் அதனால் பொன்னி ஆறு என்ற பெயர் வந்ததாகவும் சொல்லப்படுகிறது. 
காவிரியிலிருந்து கர்நாடகத்தில் 7 ஆறுகளும், தமிழகத்தில் 3 ஆறுகளும் துணை ஆறுகளாக பிரிகின்றன.  
இப்படி பல ஆறுகள் பிரிந்தும், இணைந்தும் ஆழமான குறுகிய பாறைகளின் வழியாக பாய்ந்து மேகதாட்டு என்ற இடத்தைத் தாண்டி தமிழகத்தை அடைகிறது. 
இந்த இடத்தை ஆடு தாண்டும் காவிரி என்றும் அழைப்பார்கள். இந்த இடத்தில் ஆடுகள் கூட காவிரியைத் தாண்டி விடலாம் என்பதால்தான் மேகேதாட்டு என்று பெயர் வந்தது.

நீர்ப் பங்கீடு:

காவிரி நீர் கர்நாடகா, தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா ஆகிய பகுதிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது.
ஏற்கனவே நடுவர் மன்றம் அமைக்கப்பட்டு அது தனது தீர்ப்பில் தமிழகத்திற்கு 192 TMC, கேரளாவுக்கு 30 TMC, புதுவைக்கு 7 TMC என்ற அளவில் வழங்கிட உத்தரவிட்டுள்ளது. 
இந்த இறுதித் தீர்ப்பை எதிர்த்து 4 மாநிலங்களும் தொடர்ந்த வழக்கில் 16-02-18 ல் தீபக் மிஸ்ரா அடங்கிய அமர்வு கீழ்க்கண்டவாறு தீர்ப்பளித்தது.   தமிழகத்திற்கு ஏற்கனவே வழங்கப்பட்ட 192 TMC யில் 14.75 TMC குறைத்து 177.25 TMC நீர் வழங்கிட உத்தரவிட்டது. 
தமிழகத்தில் நிலத்தடி நீர் 20 TMC இருப்பதால் 14.75 TMC குறைத்து    ஒதுக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவுக்கு முன்பு அளித்த 270 TMC தண்ணீரோடு இந்த 14.75 TMC தண்ணீரையும் சேர்த்து 284.75 TMC வழங்கிட உத்தரவிட்டுள்ளது.
புதுவை, கேரளாவுக்கு நடுவர் மன்றத்தில் அளித்த தீர்ப்பின்படி அதாவது கேரளாவுக்கு 30 TMC, புதுவைக்கு 7 TMC வழங்கிட வேண்டும்.  
இது அடுத்த 15 ஆண்டுகள் வரை  நடைமுறையில் இருக்கும் என்றும் அதுவரையில் மேல் முறையீடு கூடாது என்றும், 6 வார காலத்திற்குள் மேலாண்மை வாரியம் அமைத்திட வேண்டும், இனி புதிய அணைகள் ஏதும் கட்டக்கூடாது என்றும் உத்தரவிட்டது.  

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவிட்டு 6 ஆண்டுகள் ஆகியும், மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காதது ஏன் என உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு கண்டனமும்  தெரிவித்துள்ளது.


இந்த தீர்ப்பை திருப்தி இல்லையென்றாலும், தமிழகமும், கர்நாடக மக்களும் ஏற்றுக் கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்த போதுதான் பிரச்சினை வந்தது. 

கன்னட மக்கள் உழைப்பில், கர்நாடக அரசின் முதலீட்டில் விஸ்வேஸ்வரய்யா கஷ்டப்பட்டு கட்டிய காவிரியிலிருந்து அதாவது  KRS அணையிலிருந்து நீரை தமிழக மக்கள் பங்கு கேட்பது எந்த விதத்தில் நியாயம் ?  நிறைய பேருக்கு ஒரு விஷயம் புரியவே இல்லை.
குடகு மலையில் உற்பத்தியாகும் காவிரி ஆறு அங்கிருந்து நேரடியாக ஓடி வந்து தமிழகத்தின் வழியாக ஓடிப்போய் கடலில் கலந்துவிடுவது போலவும், அப்படி கடலில் கலக்க விட்டுவிட்டு ஏதோ கர்நாடகாக்காரன் தேக்கி வைத்திருக்கும் தண்ணீரில் பங்கு கேட்டு தமிழகம் தகராறு செய்வது போலவும் சிலர் நினைக்கிறார்கள்.
பூகோள ரீதியாக பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக காவிரி நதி கரூர், திருச்சி, தஞ்சை, திருவாரூர் வழியாக ஓடி கடலில் கலந்து கொண்டுதான் இருந்தது.  அப்போது காவிரி டெல்டாவில் முப்போகம் விவசாயம் நடந்துகொண்டேதான் இருந்தது.  ஆனால் பிரச்சனை ஆரம்பித்தது  1932ல் காவிரியின் நீர்பிடிப்பு பகுதியில் கிருஷ்ண ராஜ சாகர் அணை கட்டப்பட்ட பிறகுதான்.
அதுவரை தடையின்றி ஓடிக்கொண்டிருந்த நதி காவிரி டெல்ட்டாவை தாண்டி தினமும் பல மில்லியன் லிட்டர் தண்ணீரை கடலுக்குள் கொண்டுபோய் சேர்த்துக்கொண்டே இருந்தது.
KRS அணை கட்டப்பட்ட பிறகு காவிரியில் ஒரு சொட்டு நீர்கூட வர முடியவில்லை. காரணம் காவிரியை தடுத்து கட்டப்பட்ட KRS அணையில் நீர் அடைபட்டது.  அந்த அணை நிரம்பும் தருவாயில் உபரி நீர் மட்டும் வெளியேறிக்கொண்டிருக்கும். அதாவது இயற்கையான போக்கில் ஓடின நதி தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.   KRS அணையை தொடர்ந்து கபினி, ஹேமாவதி,ஹாரங்கி அணைகள் கட்டப்பட்டபோதும் அப்படித்தான்.

நம்முடைய நதி நீரை கேட்பது நமது உரிமை.  சிலர் அதை என்னமோ யாசகம் போல நினைத்துக்கொண்டு மழை நீரை சேகரிக்க கூடாதா? கடல் நீரை குடி நீராக்கி குடிக்க கூடாதா என்கிறார்கள்.  அவர்களுக்கு ஒன்று புரியவில்லை. நதி நீர் என்பது நிலத்திற்கு மட்டும் சொந்தமானது அல்ல, கடலுக்கும் சொந்தமானது. நதி நீர் கடலில் கலந்தேயாக வேண்டும்.  அது கட்டாயம். அதுதான் இயற்கை.புவியியல் வல்லுந‌ர்கள்  இதற்கான விளக்கத்தை தெளிவாகத் தருகிறார்கள்.

சில ஆண்டுகளுக்கு முன் சீனா மஞ்சளாற்றின் குறுக்கே உலகின் மிகப்பெரிய ஒரு அணையை கட்டி, அந்த தண்ணீரை பாலைவனத்தின் பக்கம் திருப்பி பல லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்களை சோலைவனமாக்கியது. ஆனால் அந்த ஆறு கடலில் சேரும் பகுதியில் நதி நீர் ஓடாததால் உப்பு நீர் நிலத்தடி நீருக்குள் ஊடுறுவியது. அந்த பகுதி முழுக்க  கடற்கரையின் உப்பு அளவு அதிகரித்தது.
கடற்கரையோரம் இருந்த மஞ்சள் ஆற்றின்  பாசன பகுதிகள் பாலைவனமானது. மிகப்பெரிய பாதிப்பை சந்தித்த சீனா தற்போது அதை சரி செய்ய முயன்று வருகிறது.
அதுபோல காவிரி நீர் கடலில் கலக்காவிட்டால் காவிரி கழிமுக மாவட்டங்கள் பாலைவனமாகும்.
அணைகள் கட்டி அந்த தண்ணீர் ஏரி, குளங்களில் சேமிக்கப்பட்டாலும் குறிப்பிட்ட அளவு தண்ணீர் கட்டாயம் கடலில் கலந்தேயாக வேண்டும்.

அணைகள் பற்றி பேசுவோம்

கர்நாடகாவிலிருக்கும் KRS, கபினி, ஹேரங்கி, ஹேமாவதி அணைகளில் தேக்கப்படும் தண்ணீரை நம் மேட்டூர் ஸ்டேன்லி அணை என்ற ஒரு அணையில் தேக்கிவிடலாம். இந்த 5 அணைகளில் மேட்டூர் அணைதான் மிகப்பெரியது.  கர்நாடகத்திலிருக்கும் அனைத்து அணைகளும் மலைப்பாங்கான மேட்டு நிலத்தில் இருக்கும் அணைகள்தான்.
ஆனால் தமிழகத்தில் மேட்டூருக்கு கீழே அப்படிப்பட்ட நில அமைப்பு இல்லை. காவிரி டெல்டா மாவட்டங்கள் சமவெளிப்பகுதிகளை கொண்டது. அதில் கிருஷ்ணராஜ சாகர், மேட்டூர் ஸ்டேன்லி போன்ற அணைகளை கட்ட முடியாது.  ஆனால் சிறு சிறு தடுப்பணைகளை  கட்ட முடியும்.  இது பூகோள ரீதியில் உள்ள நீர் வடி நிலம், டெல்டா சமவெளி.
சிலர் கல்லணை மட்டும் டெல்டா பகுதியில் இல்லையா என கேட்கலாம்.  ஆம். கேள்வி சரிதான்.  கல்லணை ஒன்றும் நீங்கள் நினைப்பதுபோல் டி.எம்.சி கணக்கில் நீரை தேக்கி வைத்து வறட்சி காலத்தில் திறந்து விட்டு பயன்படுத்தும் அணை கிடையாது. அது ஓடும் காவிரியின் குறுக்கே தண்ணீரை தடுத்து நிறுத்தி பல சிறு சிறு கால்வாய்களுக்கு பிரித்து அனுப்பும் ஒரு மிகப்பெரிய மதகு போன்றது. கல்லணையில் ஒரு டி.எம்.சி நீரை கூட தேக்க முடியாது.  காவிரி நதியை பொறுத்தவரை மேட்டூர் ஸ்டேன்லி நீர் தேக்கம் ஒன்று மட்டுமே போதும். 
அதிலிருந்து வரும் தண்ணீரை சேமிக்க முயற்சிக்கலாம்.
நிறைய சிறு சிறு தடுப்பணைகள் கட்டி நிலத்தடிநீர் மட்டத்தை உயர்த்தலாம், அந்த நீரை ஏரி, குளங்களில் சேமிக்கலாம்.
ஆனால் ஒரு சொட்டு தண்ணீரைக்கூட கடலுக்கு விடமாட்டேன் என நாம் நினைத்தால் இயற்கை நம்மை பழிக்கும்.  டெல்டா மாவட்டங்களில் மிகப்பெரிய அணையை கட்டுவேன் என யாராவது சொன்னால் அது கற்பனையாகத்தான் இருக்கும்.உண்மையில் காவிரி டெல்டா சமவெளியில் பெரிய அணைகளை கட்ட முடியாது. சிறு, குறு தடுப்பணைகளை மட்டுமே கட்ட முடியும்.  காவிரி டெல்டா மாவட்டங்களில் நிறைய தடுப்பணைகளை கட்டிக்கொள்ளாதது நம்முடைய தவறுதான். தர்க்க ரீதியில் தவறுதான். ஆனால் இயற்கையை நாம் மாற்ற முயற்சிக்கவில்லை என்ற வகையில் அது சரி.
இதற்காக நமக்கு காவிரியில் உரிமை இல்லாதது போலவும், கர்நாடகாவை தொந்தரவு செய்வது போலவும் யாரும் பேசாதீர்கள்.
சர்வதேச நதி நீர் தாவா சட்டத்தின்படி ஒரு நதி மீது அதிக உரிமை அதன் கீழ் பகுதியில் இருப்பவர்களுக்குத்தான். எவரிடம் அதை பயன்படுத்தும் பகுதி அதிகம் உள்ளதோ அவர்களுக்குத்தான் அதிக உரிமை.
நமது உரிமையைத்தான் நாம் கேட்கிறோம்.    பிச்சை அல்ல.   நமது அரசியல் சண்டைக்காக நமது உரிமையை ஏளனப்படுத்தாதீர்கள்!
காவிரியில் நமக்கு இருக்கும் உரிமை போன்றே வங்கக்கடலுக்கும் உரிமை இருக்கிறது. பல லட்சக்கணக்கான ஆண்டுகளாக காவிரி நீரை வங்கக்கடலும் குடித்து வந்திருக்கிறது. அதை கர்நாடகாவும், நாமும் முழுவதும் எடுத்துக்கொண்டால் இயற்கைக்கான பங்கை யார் கொடுப்பது?

காவிரி நமது உரிமை.  உரிமைக்கான போராட்டத்தில் ஈடுபடுபவர் எவராக இருப்பினும் அவர்களுடன் நாமும் கரம் கோர்ப்போம். வெற்றி பெறுவோம்!



Wednesday, April 18, 2018

வருந்துகிறோம்!


நம்மிடையே பட்டுக்கோட்டை தொலைபேசி இணைப்பகத்தில் பணியாற்றிய தோழர்
S. சீனிவாசன் ( 50 ) அவர்கள் நேற்று 17-04-2018 நள்ளிரவு இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
இன்று 18-04-2018 மாலை 4 மணிக்கு வளவன்புரம் அவரது இல்லத்திலிருந்து உடல் எடுத்துச் செல்லப்பட்டு   நல்லடக்கம்
 நடைபெறும். 
 ‎தோழரின் பிரிவால் வாடும் அவரது குடும்பத்தாருக்கு நமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்!

இவண், 
NFTE - BSNL,
தஞ்சை மாவட்ட சங்கம்.

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR