தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Thursday, April 5, 2018

காவிரி மேலாண்மை வாரியம் 
அமைப்பதில் உள்ள கயமைத்தனம்.

6 வார காலத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்திரவிட்ட கெடு முடிந்துவிட்ட சூழ்நிலையில், உச்சநீதிமன்ற உத்தரவை மயிர் அளவிற்குக் கூட மதிக்காமல் உதாசினப்படுத்தி இருக்கின்றது மத்தியில் ஆளும் ஆட்சி. 

உச்ச நீதிமன்ற நீதிபதிகளே, 'மோடி ஆட்சியில் நீதி மிரட்டியும் விலைபேசியும் வாங்கப்படுகின்றது' என்று பகிரங்கமாக குற்றம் சுமத்தி இருக்கும் சூழ்நிலையில், இந்த அரசு நீதித்துறையையும், அது கொடுக்கும் தீர்ப்புகளையும் மதிக்கும் என்று யார்தான் எதிர்பார்க்க முடியும்? 


ஆனால் தமிழர்களை மோடி அரசு இவ்வளவு  உதாசீனப்படுத்தியதையும், அவமானப்படுத்தியதையும் ஒரு பொருட்டாகக் கூட நினைக்காமல் மாநிலத்தை ஆளும் அடிமை அரசு, 'நாங்கள் மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில் உண்ணா விரதம் இருப்போம்' என்கின்றார்கள். இந்த உண்ணாவிரதப் போராட்டம் இந்தியாவில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்துமாம்!.


ஆற்று மணலைக் கடத்தி கோடி கோடியாய் கொள்ளையடித்த கும்பலுக்குக் காவிரிப் பிரச்சினையில் உணர்வுப்பூர்வமான சிந்தனை இருக்கும் என்று நாம் எதிர்பார்த்தால் நம்மைவிட அறிவிலிகள் வேறு யாரும் இருக்க முடியாது. இந்த மக்களை இன்னும் நம்ப வைத்து கழுத்தறுக்கவே இவர்கள் இந்த உண்ணாவிரதப் போராட்டம் இருக்கின்றார்கள் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
 தமிழர்களை அழித்து அப்படி ஓர் இனம் இந்த உலகில் இருந்ததற்கான சுவடே இல்லாமல் செய்திட வேண்டும் என்பதுதான்  நீண்ட காலத் திட்டமாகும். தமிழ்நாட்டில் இந்தியையும், சமஸ்கிருதத்தையும், நீட்டையும் திணித்து தமிழ்நாட்டு மக்களை அழிப்பதைவிட, காவிரி என்ற ஒன்றை இல்லாமல் செய்துவிட்டால் மொத்த தமிழ்நாட்டில் பாதியை அழித்துவிடலாம் என்பதுதான் தமிழின எதிரிகளின் திட்டமாக உள்ளது. 
மோடியின் ஆட்சி முடிவதற்குள் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் சுடுகாடாக மாற்ற வேண்டும் என இந்தப் பாசிச கும்பல் திட்டமிட்டு செயலாற்றி வருகின்றது. 
தமிழ் மக்களின் மொழி, பண்பாடு, அவர்களின் நாகரிகம் என அனைத்தையும் அழித்தொழிக்க செயலாற்றிவரும் இந்தக் கும்பலுடன் தமிழ்நாட்டில் இணைந்து செயலாற்றிவரும் இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி போன்ற  அமைப்புகளும், இன்னும் பிற சாதிய அமைப்புகளும் இவர்களுடன் கைக்கோர்த்து தமிழ்மக்களை அழிக்க பணி செய்து கொண்டு இருக்கின்றன.
இந்து மக்களின் நன்மைக்காக அவர்களின் ஒற்றுமைக்காக கட்சி நடத்துவதாக சொல்லி, தமிழ் மக்களை சாதியாகவும், மதமாகவும் பிரித்து அவர்கள் மத்தியில் சாதிய துவேசத்தையும், மத துவேசத்தையும் வளர்க்கும் இந்தக் கும்பல், தமிழ் மக்களை ஒருக்காலும் அப்படி தன்னுடைய சக இந்துக்களாகப் பார்த்து அவர்களின் நன்மைக்காக உழைப்பவர்கள் கிடையாது என்பது இதன் மூலம் மீண்டும் ஒரு முறை நிரூபிக்கப்பட்டிருக்கின்றது. 
தமிழர்கள் வரலாற்றில் ஒருநாளும் இந்துக்களாக இருந்ததும் இல்லை, இனி இருப்பதற்கான எந்தத் தார்மீக நியாயமும் இல்லை என்பதைத்தான் மத்தியில் இருக்கும் மோடியின் பாசிச ஆட்சி திரும்பத் திரும்ப நிரூபித்துக்கொண்டு இருக்கின்றது. தமிழ்நாடு மத்திய அரசுக்கு வரி கொடுக்கவும், மற்ற மாநிலங்களில் இருந்து வாழ வழியற்று இங்கு வரும் நபர்களை இன்முகத்தோடு ஏற்று அவர்களை வாழவைக்கவும் மட்டுமே தேவைப்படுகின்றது. 
மற்றபடி தமிழ் மக்கள் எக்கேடு கெட்டு நாசமாய்ப் போனால்தான் நமக்கென்ன என்ற சிந்தனைதான் எப்பொழுதுமே மத்தியில் இருக்கும்  அரசுகளின் கொள்கை முடிவாக இருக்கின்றது.

மானமுள்ள தமிழினமே இப்போது நீ விழித்துக்கொள்ளவில்லை என்றால் உன்னுடைய தலைமுறையே அழிந்துபோகும். உணர்வு பெற்று விழித்தெழு. தெருவுக்கு வா, போராடு. உன் தாத்தனுக்கு தாத்தனுக்கும், உன் அப்பனுக்கு அப்பனுக்கும் இருந்த உரிமையை யாரோ ஒரு கேடு கெட்ட மதவாதக் கும்பல் பறிக்க முயலுகின்றது. விட்டுவிடாதே. வரலாற்றில் இது ஒரு முக்கிய தருணம். வாழ்வா சாவா போராட்டம். மோதிப் பார்ப்போம். இந்த முறை ஆரிய ராமனைப் பழி தீர்க்க ஒரு இராவணன் இல்லை எட்டுகோடி ராவணன்கள் இருக்கின்றார்கள் என்பதைக் காட்டுவோம். நாம் மானமுள்ள தமிழர்களாக இருந்தால் காவிரியை மீட்போம், இல்லை காவிரிக்கு நம் உயிரைக் கொடுப்போம். போராடு தமிழகமே போராடு!!

No comments:

Post a Comment

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR