தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Friday, April 20, 2018

காவேரி மேலாண்மை வாரியம்!

காவேரி மேலாண்மை வாரியம் ஏன் அமைக்க வேண்டும்.  
அதை அமைப்பதில் என்ன சிக்கல்?
அதை அமைப்பதால் யாருக்கு  என்ன லாபம்? யாருக்கு என்ன நஷ்டம்?
அதில் தமிழகத்திற்கு என்ன உரிமையிருக்கிறது?
கர்நாடகாவிற்கு என்ன உரிமை இருக்கிறது?
இந்த நான்கைந்து கேள்விகளுக்கு  விடை காண முயற்சிப்பது இந்த காவிரி பிரச்சினையைப் பற்றிய புரிதலுக்கு வழிவகுக்கும்.

இப்போது காவேரி நதியைப் பற்றி மேலோட்டமாக கொஞ்சம் பார்ப்போம்.

காவேரி நதி கர்நாடகாவில் குடகு மாவட்டத்தில்  தலைக்காவேரி என்னுமிடத்தில் 4400 மீட்டர் உயரத்தில் தோன்றுகிறது. 
இது கர்நாடகாவில் 6 மாவட்டங்களையும், தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களையும் கடந்து பூம்புகாரில் கடலில் கலக்கிறது.  
இதன் நீளம் 800 கிலோ மீட்டர். கர்நாடகாவில் 320 கிலோமீட்டரும், தமிழகத்தில் 416 கிலோமீட்டரும், இரு மாநிலத்தின் எல்லையில்  ஒரு 64 கிலோமீட்டரும் செல்கிறது. 
காவிரியில் விழும் இரு அருவிகள் கர்நாடகாவில் சிவசமுத்திர நீர்வீழ்ச்சியும், தமிழகத்தில் ஒகேனக்கல் அருவியும் ஆகும்.  
காவிரிக்கு பொன்னி நதி என்று ஒரு பெயரும் உண்டு.இந்த ஆற்றில் தங்கத் தாது இருப்பதாகவும் அதனால் பொன்னி ஆறு என்ற பெயர் வந்ததாகவும் சொல்லப்படுகிறது. 
காவிரியிலிருந்து கர்நாடகத்தில் 7 ஆறுகளும், தமிழகத்தில் 3 ஆறுகளும் துணை ஆறுகளாக பிரிகின்றன.  
இப்படி பல ஆறுகள் பிரிந்தும், இணைந்தும் ஆழமான குறுகிய பாறைகளின் வழியாக பாய்ந்து மேகதாட்டு என்ற இடத்தைத் தாண்டி தமிழகத்தை அடைகிறது. 
இந்த இடத்தை ஆடு தாண்டும் காவிரி என்றும் அழைப்பார்கள். இந்த இடத்தில் ஆடுகள் கூட காவிரியைத் தாண்டி விடலாம் என்பதால்தான் மேகேதாட்டு என்று பெயர் வந்தது.

நீர்ப் பங்கீடு:

காவிரி நீர் கர்நாடகா, தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா ஆகிய பகுதிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது.
ஏற்கனவே நடுவர் மன்றம் அமைக்கப்பட்டு அது தனது தீர்ப்பில் தமிழகத்திற்கு 192 TMC, கேரளாவுக்கு 30 TMC, புதுவைக்கு 7 TMC என்ற அளவில் வழங்கிட உத்தரவிட்டுள்ளது. 
இந்த இறுதித் தீர்ப்பை எதிர்த்து 4 மாநிலங்களும் தொடர்ந்த வழக்கில் 16-02-18 ல் தீபக் மிஸ்ரா அடங்கிய அமர்வு கீழ்க்கண்டவாறு தீர்ப்பளித்தது.   தமிழகத்திற்கு ஏற்கனவே வழங்கப்பட்ட 192 TMC யில் 14.75 TMC குறைத்து 177.25 TMC நீர் வழங்கிட உத்தரவிட்டது. 
தமிழகத்தில் நிலத்தடி நீர் 20 TMC இருப்பதால் 14.75 TMC குறைத்து    ஒதுக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவுக்கு முன்பு அளித்த 270 TMC தண்ணீரோடு இந்த 14.75 TMC தண்ணீரையும் சேர்த்து 284.75 TMC வழங்கிட உத்தரவிட்டுள்ளது.
புதுவை, கேரளாவுக்கு நடுவர் மன்றத்தில் அளித்த தீர்ப்பின்படி அதாவது கேரளாவுக்கு 30 TMC, புதுவைக்கு 7 TMC வழங்கிட வேண்டும்.  
இது அடுத்த 15 ஆண்டுகள் வரை  நடைமுறையில் இருக்கும் என்றும் அதுவரையில் மேல் முறையீடு கூடாது என்றும், 6 வார காலத்திற்குள் மேலாண்மை வாரியம் அமைத்திட வேண்டும், இனி புதிய அணைகள் ஏதும் கட்டக்கூடாது என்றும் உத்தரவிட்டது.  

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவிட்டு 6 ஆண்டுகள் ஆகியும், மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காதது ஏன் என உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு கண்டனமும்  தெரிவித்துள்ளது.


இந்த தீர்ப்பை திருப்தி இல்லையென்றாலும், தமிழகமும், கர்நாடக மக்களும் ஏற்றுக் கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்த போதுதான் பிரச்சினை வந்தது. 

கன்னட மக்கள் உழைப்பில், கர்நாடக அரசின் முதலீட்டில் விஸ்வேஸ்வரய்யா கஷ்டப்பட்டு கட்டிய காவிரியிலிருந்து அதாவது  KRS அணையிலிருந்து நீரை தமிழக மக்கள் பங்கு கேட்பது எந்த விதத்தில் நியாயம் ?  நிறைய பேருக்கு ஒரு விஷயம் புரியவே இல்லை.
குடகு மலையில் உற்பத்தியாகும் காவிரி ஆறு அங்கிருந்து நேரடியாக ஓடி வந்து தமிழகத்தின் வழியாக ஓடிப்போய் கடலில் கலந்துவிடுவது போலவும், அப்படி கடலில் கலக்க விட்டுவிட்டு ஏதோ கர்நாடகாக்காரன் தேக்கி வைத்திருக்கும் தண்ணீரில் பங்கு கேட்டு தமிழகம் தகராறு செய்வது போலவும் சிலர் நினைக்கிறார்கள்.
பூகோள ரீதியாக பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக காவிரி நதி கரூர், திருச்சி, தஞ்சை, திருவாரூர் வழியாக ஓடி கடலில் கலந்து கொண்டுதான் இருந்தது.  அப்போது காவிரி டெல்டாவில் முப்போகம் விவசாயம் நடந்துகொண்டேதான் இருந்தது.  ஆனால் பிரச்சனை ஆரம்பித்தது  1932ல் காவிரியின் நீர்பிடிப்பு பகுதியில் கிருஷ்ண ராஜ சாகர் அணை கட்டப்பட்ட பிறகுதான்.
அதுவரை தடையின்றி ஓடிக்கொண்டிருந்த நதி காவிரி டெல்ட்டாவை தாண்டி தினமும் பல மில்லியன் லிட்டர் தண்ணீரை கடலுக்குள் கொண்டுபோய் சேர்த்துக்கொண்டே இருந்தது.
KRS அணை கட்டப்பட்ட பிறகு காவிரியில் ஒரு சொட்டு நீர்கூட வர முடியவில்லை. காரணம் காவிரியை தடுத்து கட்டப்பட்ட KRS அணையில் நீர் அடைபட்டது.  அந்த அணை நிரம்பும் தருவாயில் உபரி நீர் மட்டும் வெளியேறிக்கொண்டிருக்கும். அதாவது இயற்கையான போக்கில் ஓடின நதி தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.   KRS அணையை தொடர்ந்து கபினி, ஹேமாவதி,ஹாரங்கி அணைகள் கட்டப்பட்டபோதும் அப்படித்தான்.

நம்முடைய நதி நீரை கேட்பது நமது உரிமை.  சிலர் அதை என்னமோ யாசகம் போல நினைத்துக்கொண்டு மழை நீரை சேகரிக்க கூடாதா? கடல் நீரை குடி நீராக்கி குடிக்க கூடாதா என்கிறார்கள்.  அவர்களுக்கு ஒன்று புரியவில்லை. நதி நீர் என்பது நிலத்திற்கு மட்டும் சொந்தமானது அல்ல, கடலுக்கும் சொந்தமானது. நதி நீர் கடலில் கலந்தேயாக வேண்டும்.  அது கட்டாயம். அதுதான் இயற்கை.புவியியல் வல்லுந‌ர்கள்  இதற்கான விளக்கத்தை தெளிவாகத் தருகிறார்கள்.

சில ஆண்டுகளுக்கு முன் சீனா மஞ்சளாற்றின் குறுக்கே உலகின் மிகப்பெரிய ஒரு அணையை கட்டி, அந்த தண்ணீரை பாலைவனத்தின் பக்கம் திருப்பி பல லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்களை சோலைவனமாக்கியது. ஆனால் அந்த ஆறு கடலில் சேரும் பகுதியில் நதி நீர் ஓடாததால் உப்பு நீர் நிலத்தடி நீருக்குள் ஊடுறுவியது. அந்த பகுதி முழுக்க  கடற்கரையின் உப்பு அளவு அதிகரித்தது.
கடற்கரையோரம் இருந்த மஞ்சள் ஆற்றின்  பாசன பகுதிகள் பாலைவனமானது. மிகப்பெரிய பாதிப்பை சந்தித்த சீனா தற்போது அதை சரி செய்ய முயன்று வருகிறது.
அதுபோல காவிரி நீர் கடலில் கலக்காவிட்டால் காவிரி கழிமுக மாவட்டங்கள் பாலைவனமாகும்.
அணைகள் கட்டி அந்த தண்ணீர் ஏரி, குளங்களில் சேமிக்கப்பட்டாலும் குறிப்பிட்ட அளவு தண்ணீர் கட்டாயம் கடலில் கலந்தேயாக வேண்டும்.

அணைகள் பற்றி பேசுவோம்

கர்நாடகாவிலிருக்கும் KRS, கபினி, ஹேரங்கி, ஹேமாவதி அணைகளில் தேக்கப்படும் தண்ணீரை நம் மேட்டூர் ஸ்டேன்லி அணை என்ற ஒரு அணையில் தேக்கிவிடலாம். இந்த 5 அணைகளில் மேட்டூர் அணைதான் மிகப்பெரியது.  கர்நாடகத்திலிருக்கும் அனைத்து அணைகளும் மலைப்பாங்கான மேட்டு நிலத்தில் இருக்கும் அணைகள்தான்.
ஆனால் தமிழகத்தில் மேட்டூருக்கு கீழே அப்படிப்பட்ட நில அமைப்பு இல்லை. காவிரி டெல்டா மாவட்டங்கள் சமவெளிப்பகுதிகளை கொண்டது. அதில் கிருஷ்ணராஜ சாகர், மேட்டூர் ஸ்டேன்லி போன்ற அணைகளை கட்ட முடியாது.  ஆனால் சிறு சிறு தடுப்பணைகளை  கட்ட முடியும்.  இது பூகோள ரீதியில் உள்ள நீர் வடி நிலம், டெல்டா சமவெளி.
சிலர் கல்லணை மட்டும் டெல்டா பகுதியில் இல்லையா என கேட்கலாம்.  ஆம். கேள்வி சரிதான்.  கல்லணை ஒன்றும் நீங்கள் நினைப்பதுபோல் டி.எம்.சி கணக்கில் நீரை தேக்கி வைத்து வறட்சி காலத்தில் திறந்து விட்டு பயன்படுத்தும் அணை கிடையாது. அது ஓடும் காவிரியின் குறுக்கே தண்ணீரை தடுத்து நிறுத்தி பல சிறு சிறு கால்வாய்களுக்கு பிரித்து அனுப்பும் ஒரு மிகப்பெரிய மதகு போன்றது. கல்லணையில் ஒரு டி.எம்.சி நீரை கூட தேக்க முடியாது.  காவிரி நதியை பொறுத்தவரை மேட்டூர் ஸ்டேன்லி நீர் தேக்கம் ஒன்று மட்டுமே போதும். 
அதிலிருந்து வரும் தண்ணீரை சேமிக்க முயற்சிக்கலாம்.
நிறைய சிறு சிறு தடுப்பணைகள் கட்டி நிலத்தடிநீர் மட்டத்தை உயர்த்தலாம், அந்த நீரை ஏரி, குளங்களில் சேமிக்கலாம்.
ஆனால் ஒரு சொட்டு தண்ணீரைக்கூட கடலுக்கு விடமாட்டேன் என நாம் நினைத்தால் இயற்கை நம்மை பழிக்கும்.  டெல்டா மாவட்டங்களில் மிகப்பெரிய அணையை கட்டுவேன் என யாராவது சொன்னால் அது கற்பனையாகத்தான் இருக்கும்.உண்மையில் காவிரி டெல்டா சமவெளியில் பெரிய அணைகளை கட்ட முடியாது. சிறு, குறு தடுப்பணைகளை மட்டுமே கட்ட முடியும்.  காவிரி டெல்டா மாவட்டங்களில் நிறைய தடுப்பணைகளை கட்டிக்கொள்ளாதது நம்முடைய தவறுதான். தர்க்க ரீதியில் தவறுதான். ஆனால் இயற்கையை நாம் மாற்ற முயற்சிக்கவில்லை என்ற வகையில் அது சரி.
இதற்காக நமக்கு காவிரியில் உரிமை இல்லாதது போலவும், கர்நாடகாவை தொந்தரவு செய்வது போலவும் யாரும் பேசாதீர்கள்.
சர்வதேச நதி நீர் தாவா சட்டத்தின்படி ஒரு நதி மீது அதிக உரிமை அதன் கீழ் பகுதியில் இருப்பவர்களுக்குத்தான். எவரிடம் அதை பயன்படுத்தும் பகுதி அதிகம் உள்ளதோ அவர்களுக்குத்தான் அதிக உரிமை.
நமது உரிமையைத்தான் நாம் கேட்கிறோம்.    பிச்சை அல்ல.   நமது அரசியல் சண்டைக்காக நமது உரிமையை ஏளனப்படுத்தாதீர்கள்!
காவிரியில் நமக்கு இருக்கும் உரிமை போன்றே வங்கக்கடலுக்கும் உரிமை இருக்கிறது. பல லட்சக்கணக்கான ஆண்டுகளாக காவிரி நீரை வங்கக்கடலும் குடித்து வந்திருக்கிறது. அதை கர்நாடகாவும், நாமும் முழுவதும் எடுத்துக்கொண்டால் இயற்கைக்கான பங்கை யார் கொடுப்பது?

காவிரி நமது உரிமை.  உரிமைக்கான போராட்டத்தில் ஈடுபடுபவர் எவராக இருப்பினும் அவர்களுடன் நாமும் கரம் கோர்ப்போம். வெற்றி பெறுவோம்!



No comments:

Post a Comment

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR