தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Wednesday, April 25, 2012

     மே தினம் !


     நாடு தழுவிய வேலை நிறுத்தத்தை 1886 மே 1 ஆம் நாள் அன்று செய்திட வேண்டும் என்று அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பு அறிவித்தது. அந்த மே 1 ஆம் தேதியே மே தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
     அமெரிக்காவில் 126  ஆண்டுகளுக்கு முன்னர் 12 மணி நேரம், 18 மணி நேரம் என்று தொழிலாளர்கள் வேலை வாங்கப்பட்டு மிகுந்த கொடுமைக்கு உள்ளாயினர். 12 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இரவில் தூங்க ஒரு மணி நேரமும், சாப்பிட ஒரு ரொட்டித் துண்டும் கொடுக்கப்பட்டு வேலை வாங்கப்பட்டனர். இலேசாக கண் அயர்ந்தால் கூட சாட்டையடிக்கு ஆளாவார்கள்.  
     தாங்கொணா இக் கொடுமையைக் காணச் சகியாத முன்னணி பத்திரிகையாளர்களான எங்கல், ஸ்பைஸ், பிஷர், பார்சன்ஸ் ஆகியோர் தொழிலாளர்களைத் திரட்டி போராடத் தலைப்பட்டனர்.   இதன் வீச்சுதான் நாடெங்கும்  பெரும் கொந்தளிப்பை உருவாக்கியது. 
     எட்டு மணி நேர உழைப்பு கேட்டு ஹே மார்க்கெட் சதுக்கத்தில் திரண்டு வேலை நிறுத்தம் செய்தனர்.   இவ் எழுச்சியை பொறுத்துக்கொள்ள முடியாமல் முதலாளித்துவ வர்க்கம் தொழிலாளர்கள் மீது தாக்குதலைத் தொடுத்தது.   
    1887 நவம்பர் 11 அன்று     தோழர்கள் எங்கல், ஸ்பைஸ், பிஷர், பார்சன்ஸ் ஆகியோர் தூக்கிலிடப்பட்டனர்.  நவம்பர் 13 1887 அன்று நடைபெற்ற இறுதி ஊர்வலத்தில் 5 லட்சம் பேர் பங்கேற்றனர்.            
     எட்டுமணி நேர வேலை என்ற அடிப்படையான அரசியல் கோசத்தை முன்வைத்து தொடங்கிய போராட்டத்தின் போது, அமெரிக்காவில் கொல்லப்பட்ட தொழிலாளர்களின் நினைவு நாளாக இதை அனுஷ்டிக்கிறோம்.
     இந்தியாவிலேயே முதன் முதலாக மே தினம் தமிழ்நாட்டில்தான் 1923 ல் சென்னையில் அறிமுகப்படுத்தப்பட்டது. சிந்தனைச் சிற்பி சிங்கரவேலரால் நடத்தப்பட்டது. 
     இந்த நாளில் நாம் எமது கைகளை உலகத்தொழிலாளி வர்க்கத்துடன் ஒருசேர உயர்த்தி, போராடக் கற்றுக் கொள்வோம். நாம் வர்க்க உணர்வு பெற்றுக் கொள்வோம். இத்தினம் உலகெங்கும் உள்ள தொழிலாளி வர்க்கம் தனது வர்க்க உணர்வோடு ஒன்றுபட்டெழுந்த நாள்.  
     
     இது ஒன்றும் உழைக்கும் வர்க்கத்தின் ஒய்வு நாள் அல்ல.  பொழுது போக்கும் களியாட்ட நாளும் அல்ல. இந்த நாள் முதலாளியின் இரக்க உணர்வில் உருவான நாளும் அல்ல. 
     மாறாக மூலதனத்துக்கு எதிராக பாட்டாளி வாக்கம் இரத்தம் சிந்தி போராடிய நாள்.  உலக தொழிலாளர் வர்க்கத்தின் நலனுக்காக போராடி பலர் மரணித்த நாள்.  
     தொழிலாளர்களின் உரிமைப் போராட்டத்தில் உலக முதலாளிகள் கற்றுக்கொண்ட பாடம் இன ஒடுக்குமுறை.   அதனால்தான் தோழர் லெனின் உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள் என்றார்.
     ஒடுக்கும் இனத்தின் தொழிலாளர்கள் ஒடுக்கப்படும் இனத்தின் விடுதலைக்குப் போராட வேண்டும் என்றார் லெனின். 
         தொழிலாளர்களின் வலியையும், வலிமையையும் உணர்ந்தவர்களாக, தொழிலாளர் வர்க்கத்திற்கு அனைத்தையும் உரிமையாக்க  பாடுபடுபவர்களாக   அணி திரள்வோம்.  


அனைவருக்கும் மே தின வாழ்த்துக்கள்.
தோழமையுடன்,
எஸ். சிவசிதம்பரம். 
மாநில துணைத் தலைவர்,
பட்டுக்கோட்டை.          

No comments:

Post a Comment

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR