தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Monday, April 8, 2019

                 BSNL நிறுவனத்தை மூடிவிடத் திட்டமிட்டு நடத்தப்படும்                    முயற்சிகளை ஏஐடியுசி கண்டிக்கிறது!
பாரத் சஞ்சார் நிகாம் லிமிட் நிறுவனத்தால் தனது ஊழியர்களுக்கான ஊதியத்தைக்கூட இரண்டு மாதங்களாக வழங்க முடியாத நிலையில் உள்ளது என்பன போன்ற செய்திகள் ஊடகங்களில் திட்டமிட்டு கசியவிடப்படுகிறது. — இதன் மூலம் அந்தப் பொதுத்துறை நிறுவனத்தின் நிதிநிலமை மிக மோசமாக இருப்பதாக ஒரு சித்திரம் தீட்டப்படுகிறது.
அந்நிறுவனத்தில் ஊழியர்கள் அளவுக்கு அதிகமாக பணியமர்த்தப்பட்டுள்ளார்கள் என்பதாகச் சொல்லி, அதன் மூலம் கட்டாய ஓய்வுத் திட்டம், விருப்ப ஓய்வுத் திட்டம் மற்றும் ஓய்வு பெறும் வயதைக் குறைப்பது முதலியவற்றைச் செயல்படுத்துவதே தற்போதைய நிறுவனத்தின் நிலையைச் சீரமைப்பதற்கு அவசியத் தேவை என்பதை நம்ப வைப்பதற்கும் கட்டாயமாகத் திணிப்பதற்கும் விரும்புகிறார்கள். 
அவர்கள் கசியவிட்ட செய்தி எந்த அளவு செல்கிறது என்றால், நிறுவனத்தைக் காப்பதற்கு BSNL நிறுவனத்தின் முன் இந்த வழிமுறைகளை வேறு இல்லை; எனவே இந்த மாற்றுத் திட்டங்கள், தேர்தல் நடந்து முடிந்த பிறகு –அமைய உள்ள புதிய அரசாங்கத்தால்—நடைமுறைப்படுத்தப்படும். 
பொதுத்துறை நிறுவனங்களின் பல பிரிவுகளைத் திட்டமிட்டு மெல்லச் சாகடிக்கும் அரசின் போக்கிற்கு, BSNL நிறுவனத்தைச் சீரழிக்கும் அதன் முயற்சியே உதாரணம். ஏஐடியுசி இதனைக் கடுமையாகக் கண்டிக்கிறது. 
அரசின் தொலைத் தொடர்புத் துறையின் ஒரு பகுதி கார்பரேஷன் மயமாக்கப்பட்டபோது அதன் ஊழியர்கள் அதனை எப்படிக் கடுமையாக எதிர்த்தனர் என்பது அனைவருக்கும் நன்றாக நினைவில் இருக்கும். 1990-களில் NDA –1 தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அப்போது போராடிய ஊழியர்களிடம் கீழ்க்கண்டவற்றை உறுதி அளித்தது:

  1. ஊழியர்களின் பணி பாதுகாக்கப்படும்
  2. (அமைக்கப்படும் கார்பரேஷன் பின்னர் தனியார் மயமானாலும் ) ஊழியர்களின் ஓய்வூதியத்தை அரசே அரசு நிதியிலிருந்து வழங்கி பென்ஷன் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்
  3. உருவாக்கப்படும் கார்பரேஷன் நிதி ஸ்திரத்தன்மையுடன் பொருளாதார ரீதியில் செயல்படுவதாக உறுதி செய்யப்படும்.
அப்போது ஒரு லட்சம் அதிகாரிகள் மற்றும் இரண்டரை லட்சம் ஊழியர்கள் என மொத்தம் 3.5 லட்சம் ஊழியர்கள் பணியில் இருந்து இந்தியா முழுமைக்கும் தொலைத்தொடர்பு சேவை அளித்து வந்தனர். 2004ம் ஆண்டு வரை BSNL நிறுவனத்தின் லாபம் ரூ10,500 கோடி; வங்கியில் நிகர கையிருப்பு ரூ40ஆயிரம் கோடி. இப்படி நிகர ஆஸ்தி சொத்து ரூ 1,04,000 கோடி மதிப்பில் இருந்தது. 
நிறுவனம் இப்படிச் சிறப்பாகச் செயல்பட்டு வரும்போது உடன்நிகழ்வாக தேசிய ஜனநாக கூட்டணி அரசு தொலைத்தொடர்பின் பல சேவைகளைத் தனியார் மயப்படுத்தத் தொடங்கினார்கள், உதாரணமாக பேஜர் சிஸ்டத்தைச் சொல்லலாம். அப்போது டெலிகாம் துறை அமைச்சராக ஜெக்மோகன் இருந்தபோது டெண்டர்கள் கோரப்பட்டன. டெண்டர்களில் வென்ற தனியார் கம்பெனிகள் அரசுக்கு லைசென்ஸ் தொகையும் செலுத்தவில்லை, அரசு ஏற்படுத்திய டெண்டர் கன்டிஷன்களை மீறி நடந்ததற்காக அவர்கள் மீது விதிக்கப்பட்ட கோடிக் கணக்கான அபராதத் தொகையையும் கட்டவில்லை. (தடாலடியாக ஜெக்மோகன் மாற்றப்பட்டு) புதியதாகப் பொறுப்பேற்ற ’ஊதாக் கண் பையன்’ எனும்படியான அரசின் செல்லப்பிள்ளை அமைச்சரான பிரமோத் மகாஜன் தனியார் கம்பெனிகள் செலுத்த வேண்டிய லைசன்ஸ் மற்றும் அபராதம் எல்லாவற்றையும் தள்ளுபடி செய்து சலுகை காட்டினார். தனியாருக்கு வழங்கப்பட்ட அந்தச் சலுகையில் பெரிதும் பலன் அடைந்தது ரிலையன்ஸ் குழுமத்தைச் சார்ந்த ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் RCOM கம்பெனி. அப்போது நடந்த அதிர்ச்சிதரத்தக்க ஆச்சரியம் யாதெனில், BSNL நிறுவனம் அந்த டெண்டர் போட்டியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட வில்லை –மக்களுக்கு மொபைல் சேவை வழங்குவதிலிருந்து BSNL நிறுவனம் திட்டமிட்டு தள்ளி வைக்கப்பட்டு விலக்கப்பட்டது. 
2002-ல் BSNL டெல்லி உயர்நீதி மன்றம் சென்றபோது உயர்நீதி மன்றம் அரசிடம் சரியாகவே கேள்வி கேட்டது ” BSNL நிறுவனத்திற்கு மொபைல் சேவைப் பிரிவில் சேவை வழங்க மற்ற தனியார் நிறுவனங்களுடன் சமவாய்ப்பு போட்டிக்கான களம் ஏன் வழங்கப்பட வில்லை?” அதன் பிறகே லைசன்ஸ் வழங்கப்பட்டு, மொபைல் சேவைப் பிரிவில் கால் பதித்தது BSNL. 
அனைத்துத் தனியார் கம்பெனிகளுக்கும் பிறகு லேட்டாக வந்தாலும், லேட்டஸ்சாக 2002 லிருந்து 2005க்குள் மொபைல் பிரிவில் BSNL முதலிடத்திற்கு வந்து மொபைல் சந்தையில் மிகப் பெரிய ஷேரைப் பிடித்தது. BSNL மொபைல் சேவை வழங்கத் துவங்கிய பிறகுதான் வாடிக்கையாளர்களிடம் தனியார் நிறுவனங்கள் அதுவரை அடித்த கட்டணக் கொள்ளைகூட குறையத் தொடங்கியது. ஆனாலும் BSNLக்கு எதிரான பாரபட்சம் நீடிக்கவே செய்தது. 
லைன்சென்ஸ் கட்டுப்பாடுகளை மீறி தனியார் நிறுவனங்கள் செயல்பட்ட போதும் அவற்றை டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையம் TRAI கண்டு கொள்ளாமல் இருந்தது. ஆனால் லாபம் தராத கிராமப்புற சேவை வழங்க வேண்டும் என்பன போன்ற கட்டுப்பாடுகளை BSNL நிறுவனம் கறாராகப் பின்பற்றியது. சமூகக் கடப்பாடான கிராமப்புற சேவை வழங்குவற்காக வழங்கப்பட்ட நிவாரணத் தொகையை 2011 முதல் அரசு நிறுத்தி விட்டது, 65ஆயிரம் டவர்கள் உள்ளிட்ட BSNL கட்டமைப்புகளைப் பயன்படுத்துவதற்காகத் தனியார் நிறுவனங்கள் செலுத்த வேண்டிய கட்டணத் தொகையையும் நிறுத்தியது, 3-ஜி அலைக்கற்றை ஏலத்தில் BSNL நிறுவனம் கலந்து கொள்வதைத் தடை செய்தது என பலபலப் பாரபட்சங்கள். தற்போது ஊழியர்கள் அதிகாரிகள் அனைவரும் தங்கள் நிறுவனத்திற்கு 4-ஜி அலைக்கற்றை வழங்க வற்புறுத்தி நாடுதழுவிய அளவில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
இது மட்டுமா, கார்பரேஷன் உருவாக்கப்பட்டபோது தான் வழங்கிய நடைமுறை செயல்பாட்டு மூலதனம் ரூ7500 கோடியைத் திரும்பச் செலுத்த வற்புறுத்தியது அரசு. ஆனால் அரசு அந்த மூலதனத்தைத் திரும்பக் கேட்க மாட்டோம், மற்றும் அது வட்டியில்லாது வழங்கப்படுவது என்றெல்லாம் அன்று கூறியது. தனது உறுதி மொழிகளை மீறி திரும்பக் கேட்டது மட்டுமல்ல, 14 சதவீதம் வட்டியும் தர வேண்டும் என்று கணக்கிட்டு BSNL நிறுவனத்தின் கஜானாவிலிருந்து ரூ40ஆயிரம் கோடியைச் சுத்தமாகத் துடைத்து எடுத்து விட்டது அரசு. 
இன்று BSNL நிறுவனம் வாய்க்கும் கைக்கும் காசின்றி அல்லாட வைக்கப் பட்டுள்ளது. இந்த நிலையில்தான் பகாசுரக் கம்பெனிகளான ரிலையன்ஸ் ஜியோவை எதிர்த்து டெலிகாம் துறையில் BSNL நிறுவனம் போட்டியிட்டு நிலைத்து நிற்க வேண்டும். ரிலையன்ஸ் ஜியோ சாதாரண கம்பெனியா, சௌகிதார் பிரதமர் மோடி அவர்கள் தாமே முன்வந்து அந்தக் கம்பெனியின் பிராண்டு விளம்பரத் தூதராகச் செயல்பட்டு, வளர்ந்து வரும் கம்பெனி அல்லவா. அறிமுகச் சலுகையாக ஜியோ ஆறு மாதங்களுக்குத் தங்கள் சேவையை இலவசமாக வழங்க முன்வந்தது – இப்படி மோசடி இலவசம் என்பது டெலிகாம் ஒழுங்கு முறை ஆணையத்தின் நிபந்தனைகளுக்கு மாறானது. அறிமுகச் சலுகை 3 மாதம் என்பது எல்லையற்று விதிகளுக்கு மாறாக நீட்டிக்கப்பட்டு செயல்பட்டது, சௌகிதாரின் காருண்யமிக்க காவல் கண்காணிப்பில்.
அரசிடமிருந்து எந்த வகையான ஆதரவும் இல்லாமல், BSNL நிறுவனம் தன் வாழ்வாதாரத்திற்காகக் கடுமையாகப் போராடுகிறது. அதனோடு கூட நிறுவனத்தின் உள்ளிருந்தே சில உயர் பதவியில் இருக்கும் அதிகாரிகளாலும், அரசியல் வாதிகளாலும் நாசவேலை சூழ்ச்சிகளுக்கும் ஆளாகிறது. இந்தச் சூழ்நிலையில்தான் தொழிலாளர் அமைப்புகள் அவைகளின் உறுப்பினர்கள் கடந்த 11 ஆண்டுகளாக ஊதியமாற்றமின்றி, செல்ல இனி வழியில்லை என மதிலில் மோதி நின்றவர்களாகத் தங்கள் பொதுத்துறை நிறுவனத்தைக் காத்திடப் போராடுகிறார்கள் – அந்தப் பெரும் பொறுப்பைச் சுமக்கிறார்கள். 
BSNL ஊழியர்களின் நெஞ்சுரமும் அளப்பரிய சேவையும் கேரள மாநிலம் பெருமழையால் வெள்ளத்தில் மூழ்கி 2018-ல் அல்லல்பட்டபோது வெளிப்பட்டதை யாரும் மறந்திருக்க முடியாது. அப்போது அந்த வெள்ளக் காட்டில் தனியார் தொலைதொடர்பு நிறுவனங்கள் எவரையும் காண முடியவில்லை. அவர்கள் தங்கள் கடையைக் கட்டி கம்பி நீட்டியிருந்தார்கள். நிவாரணப்பணிகளில், மீட்பு நடவடிக்கைகளில் மக்களுக்குத் தோள் கொடுத்தது பொதுத்துறையான BSNL நிறுவனம் மட்டுமே. மேலே குறிப்பிட்டவாறு அதே (சீர்குலைக்கும்) வழிமுறைகள், இரயில்வே, எண்ணை இயற்கை எரிவாயு நிறுவனம், சுரங்கம் மற்றும் விமானப் போக்குவரத்துத் துறைகளிலும் பின்பற்றப்படுகின்றன என்பது கவலை தரத்தக்கது. 
எனவே ஏஐடியுசி கவலையைப் பகிர்ந்து கொள்வதோடு, தேர்தலுக்குப் பிறகு அடுத்து அமைய உள்ள அரசு, கேந்திரமான பொதுத்துறை நிறுவனச் சொத்துக்களை அபகரிப்பதிலிருந்து விலகி இருக்க வேண்டும் – பொதுச் சொத்துக்கள் மீதிருந்து கைகளை எடுத்துவிடுமாறு கோருகிறது. 
— AITUC Secretariat

No comments:

Post a Comment

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR