தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Wednesday, January 29, 2020



விருப்ப ஓய்வில் பணி நிறைவு பெரும் தோழர்களுக்கு 
நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்!
***********************************************
அருமைத் தோழர்களே!
அனைவருக்கும் வணக்கமும் வாழ்த்துக்களும்!   இன்றைக்கு திரளாக தோழர்கள் பணி ஒய்வு பெற்றிருக்கிறீர்கள்!   உங்களை நேரில் வாழ்த்தி, மரியாதை செய்து, வழியனுப்ப வேண்டிய கடமையை செய்ய முடியாமல் காலம் நம்மை பிரித்து விட்டது.   ஆனாலும், இந்தத் துறையில் பல ஆண்டுகள் சேவை செய்ததற்கு, உழைத்ததற்கு  ஓரளவிற்கு பணப்பலனை அடைந்திருக்கிறீர்கள் என்பது ஓர் ஆறுதல்.
           மற்ற கேடர்களைப் போலல்லாது மூன்றாம் பிரிவு ஊழியர்களின் உழைப்பு என்பது சாதாரணமானது அல்ல.  மஸ்தூர் காலத்தில் பட்ட கஷ்டங்கள், கால காலத்திற்கும் நம் நெஞ்சைவிட்டு அகலாது. அதைப் போல நம்மை முன்னெடுத்துச் சென்று, நமக்கெல்லாம் நல்ல பதவி உயர்வு, உயர்ந்த சம்பளம்  பெற்றுத்தந்தது தொழிற்சங்கம்தான் என்றால் மிகையாகாது.  தோழர்கள், குப்தா, ஜெகன், சந்திரசேகர், விச்சாரே போன்ற தலைவர்களின் பங்களிப்பு உயிர் உள்ளவரை நெஞ்சில் நிற்கும். குறிப்பாக மஸ்தூர்களுக்கு சங்கம் செய்த பணி, அளப்பரியது. 

            தொலைத்தொடர்புத் துறை பொதுத் துறையாக மாற்றப்பட்டபோது, தவிர்க்கவியலாமல் நமது சங்கம் அதை ஏற்றுக் கொண்டது.  அப்போது முன் நிபந்தனையாக தோழர் குப்தா அரசுப் பென்சனைக் கேட்டு 3 நாள் வேலை நிறுத்த அறிவிப்பு செய்தார்.  FNTO தலைவர் வள்ளியோடு இணைந்து போராடி அதில் வெற்றியும் கண்டார்.   போராடிப் பெற்ற அந்த 37A சட்டத் திருத்தம்தான் BSNL ஊழியர்களின் ஓய்வு காலப் பாதுகாப்பு.

          நமது பகுதியில் தோழியர் லைலாபானு அவர்களின் முயற்சிகள், உழைப்பு மாநில அளவில் போற்றப்பட்ட ஒன்று. விருப்ப ஓய்வில் செல்லும் அவர்களையும் இந்த நேரத்தில்  நன்றியோடு நினைத்துப் பார்க்கிறேன்.

                  தோழர்களே! எதிர்காலச் செயல்பாடுகளை ஒரு முறைக்கு நான்கு முறை ஆய்வு செய்து, மற்றவர்களிடம் கலந்து, குறிப்பாக மனைவி, மக்களிடம் நன்கு கலந்து  தேவையென்றால் சங்கத்தையும் கலந்து முடிவெடுங்கள்.  NFTE இயக்கத்தில் நீங்கள் தந்த பங்களிப்பு, உழைப்பு, கேட்டபோதெல்லாம் அளித்த நிதி இவைகளை மறுக்கவோ,  மறக்கவோ முடியாது. நீங்கள் ஓய்வு பெற்றாலும் உங்களோடு NFTE என்றும் பயணிக்கும். 

                    நமது தோழர்கள் அதிக அளவில் பங்கேற்பதும், பல்வேறு கருத்தோட்டங்கள், பல்வேறு சங்கங்களைச் சார்ந்த தோழர்கள் இணைந்திருப்பதுமான சங்கம் என்பது AIBSNLPWA ஒன்றுதான்.  நாம் ஒன்றாய் இருந்த காலத்தில்தான் முதன் முதலாக போனஸைப் பெற்றோம்.  LTC, MRS மற்றும் இரண்டு கட்டப் பதவி உயர்வுகளை பெற்றோம்.  40000 கோடி இருப்பையும், ஆண்டுக்கு ஆயிரம் கோடி லாபத்தையும் கண்டோம்.  பின் சங்கங்கள் பிளவுண்டன. தனித்தனியானோம்.  லாபம், கையிருப்பு, போனஸ், LTC, MRS எல்லாம் போய், நட்டத்திற்கு ஆளாகி இன்று சம்பளமும் கிடைக்காமல் தவிக்கிறோம்.  தெளிவான முடிவெடுக்க முடியாத இக்கட்டான சூழலில் 78000 ஊழியர்கள் விருப்ப ஓய்வில் செல்ல வேண்டிய நிலை.   இவ்வளவு சிக்கலுக்குப் பின்னரும் தனிக்கடை ஆரம்பிக்க எண்ணுகிறது சில சங்கங்கள்.  எந்தச் சங்கத்தில் பலரும் இணைந்திருக்கிறார்களோ, அதில்தான் நீங்கள் இணைய வேண்டும்.  இனியும் நம் தோழர்கள் பிளவுக்கு ஆளாகக் கூடாது.  ஓய்வுக்குப் பிறகும் நீங்கள் ஒற்றுமைப் பாதையில் செல்லும் சங்கமான AIBSNLPWA  வுக்கு சென்று அதற்கு வலு சேருங்கள்.  NFTE யின் பாரம்பரியத்தை, முத்திரையை அங்கு பதித்திடுங்கள்.

                   ஏனென்றால், அகில இந்திய அளவில் அந்தச் சங்கம் பெரிய வெற்றிகளை பெற்றுத் தந்திருக்கிறது.    நல்ல தேர்ந்த தலைவர்கள் மேல்மட்டத்தில் அங்கம் வகிக்கிறார்கள். மேலும் சமூக அக்கறையோடு செயல்படுகின்ற சங்கமாகவும் விளங்குகிறது. எனவே, அதில் இணைவது என்பதே சாலச் சிறந்தது.

                   அடுத்து வழக்கம்போல், ஓய்வு பெரும் தோழர்கள் ஒலிக்கதிர் நிதியினை அளித்திடவும்.  அதைக் கொடுக்கும்போது, ஒரு போட்டோவும், பெயர், முகவரி, பதவியுடன் கூடிய சிறு குறிப்பும் எழுதித் தாருங்கள். அது நமது பத்திரிகையில் வெளியிட உதவியாயிருக்கும்.  கூடிய மட்டும் விரைவாக தாருங்கள்.

                     நன்றி தோழர்களே!  மீண்டும் சந்திப்போம்!!

என்றும் உங்கள்,
கா. கிள்ளிவளவன்,
NFTE, தஞ்சை மாவட்டச் செயலர்.

No comments:

Post a Comment

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR