தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Thursday, January 17, 2019

மெருகேறும் TMTCLU
==============================
பலம் பொருந்திய அமைப்பான NFTE பேரியக்கம், ஒப்பந்தத் தொழிலாளிக்காக நிர்வாகத்திடம் பேசப் போகும் போது, அவர்களுக்காக நீங்கள் ஏன் பேச வருகின்றீர்கள் என்று நிர்வாகம் NFTE ஐக் கேட்டிருக்கிறது.
அப்படிக் கேட்கும்போது, துறைக்கு சம்பந்தப்பட்ட, தொழிலாளியோடு இணைக்கப்பட்ட எந்த ஒரு பிரச்சினைக்கும் நாங்கள் வருவோம், எங்களை தடுக்க முடியாது, முடிந்தால் தடுத்துப் பாருங்கள் என்று சரியான பதிலைச் சொல்லித்தான் இன்று வரை அவர்கள் சம்பந்தப்பட்ட எல்லா பிரச்சினையையும் நிர்வாகத்துடன் பேசுகிறோம், போராட்டம் நடத்துகிறோம், உடன்பாடும் போடுகிறோம்!

இதற்கெல்லாம் சட்ட ரீதியாக விதிகள் இல்லை என்பது NFTE க்கும் தெரியும், ஜெகனுக்கும் தெரியும். அமைப்பு விதிகள், அங்கீகாரம் எல்லாம் இருந்து போராடினால்தான் வெற்றிபெற முடியும் என்ற கருத்து NFTE க்கு என்றுமே இருந்ததில்லை. அக்கறையும் போர்க்குணமும் இருந்தால் போதும்.

இந் நிலைமையில்தான் NFTE வளர்கிறது, ஒப்பந்தத் தொழிலாளியின் கூட்டமும் பெருகிக் கொண்டே போகிறது. அதற்கென்று ஒரு தனி அமைப்பு இருந்தால்தான் சமாளிக்க முடியும் என்ற நிலைமை வரும்போதுதான், தமிழ் மாநில அளவில் ஒப்பந்தத் தொழிலாளிக்காக தோழர் ஜெகனால் TMTCLU அதாவது தமிழ் மாநில தொலைத்தொடர்பு ஒப்பந்தத் தொழிலாளர் சங்கம் பதிவு எண்:2810 என்றதொரு அமைப்பு துவங்கப்பட்டது. அப்போது நமக்கு அகில இந்திய அளவில் சங்கம் இல்லை. எனவே, அது அகில இந்தியச் சங்கமான AITUC யுடன் இணைக்கப்பட்டது. இந்தச் சங்கத்தை ஒவ்வொரு ஆண்டும் பணம் கட்டி இதுநாள் வரை புதுப்பித்து வந்தவர் நமது மேனாள் மாநிலச் செயலர் தோழர் தமிழ்மணி.
இந்த நிலையில்தான், வளர்ந்து வரும் நமது சங்கத்திற்கு TMTCLU விற்கு போட்டியாக, BSNLEU சங்கம் TNTCWU என்ற பெயரில் ஒரு ஒப்பந்தத் தொழிலாளர் சங்கத்தை அமைத்தது.
தோழர்கள் தமக்கு முன்னேற்றம் உடனே கிடைத்து விடாதா என்ற நப்பாசையில் இங்கும் அங்கும் ஓடிக்கொண்டிருப்பார்கள். அதனாலே அவர்களும் வளர்ந்தார்கள். சில பொய்யான ஆசைகளை, வாக்குறுதிகளை கொடுக்கும் போது அவர்கள்தான் என்ன செய்வார்கள். நாம் அவைகளை எல்லாம் பொருட்படுத்தாமல் தான் செயலாற்றி வந்தோம்! பின்னர், அதற்கு நல்ல பலன் கிடைத்து இன்றைக்கு தமிழகத்தில் முதன்மைச் சங்கமாக நாம் தான் வளர்ந்திருக்கிறோம்.
அதன் பிறகுதான், எங்கோ பிறந்த ஒரு சங்கம், நமது தமிழ் மாநிலத்திற்குள் இருக்கும், சின்னச் சின்ன மன மாச்சரியங்களை பயன்படுத்தி NFTCL என்ற பெயரில் உலா வந்தது. தமிழ்நாட்டில் ஊடுருவவும் செய்தது. ஒரு சில இடங்களில் கிளைகளும் அமைத்தார்கள். இந்த காரியத்தை நாம் செய்வோமா! சுட்டுப்போட்டாலும் தமிழகம் செய்யாது. இல்லை அவர்கள்தான் விடுவார்களா!

இயக்கங்கள் 1,2,3,4 என்று பிளவுபட்டுக் கொண்டிருக்கும் நிலைமையில் TMTCLU வைப் பிளக்க NFTCL என்ற பெயரால் முயன்றனர். இதனால் NFTE மிகுந்த சங்கடத்திற்கு ஆளானது. பாரம்பரியமிக்கதாகவும், தாய்ச்சங்கமாகவும் நடைபோட்டு வந்த NFTE யின் சார்பாக TMTCLU என்ற சங்கம் இருக்கையில் இன்னொரு சங்கமா? என்ற கேள்வியை மற்றவர்கள் முன் வைக்கும் போது அமைதியாகத்தான் இருந்தோம்! காரணம் அதில் பங்கேற்றவர்களும் NFTE தோழர்கள்தானே!
பின்னர் மாநில, மாவட்ட நிர்வாகங்கள் NFTCL ஐ அங்கீகரிக்கவில்லை. பின் நம்மிடம் முறையிட்டார்கள், எங்களையும் பேச்சு வார்த்தைக்கு அழைத்துச் செல்லுங்கள் என்று. நாம் நமக்கென்று ஒரு அமைப்பு வைத்திருக்கும்போது, அதே மாதிரி இன்னொன்றை எப்படி அழைத்துச் செல்ல முடியும் என்று சொல்லி மறுத்து விட்டோம். இந்த சிந்தனை ஏன் அவர்களுக்கு வரவில்லை என்பது கேள்விக்குறிதான்.
எங்கள் பகுதியில் தஞ்சையில், TMTCLU வைத் தவிர யாரையும் நாங்கள் நிர்வாகத்திடம் அழைத்துச் செல்வதில்லை என்பது மட்டுமல்ல, NFTE பெயரைச் சொல்லிக்கொண்டு எந்தச் சங்கம் வந்தாலும் அவர்களை அனுமதிக்கக் கூடாது என்றும் சொல்லியிருக்கிறோம். இது நாள் வரை எங்கள் பொது மேலாளர் அவர்கள் NFTCL ஐ அனுமதித்ததேயில்லை.

தமிழகத்தில் தோழர்கள் பிரிந்து கிடப்பது நல்லதல்ல. எல்லோரும் ஒன்றாய் இணைந்திருக்க வேண்டும் என்பதே என் அவா என நம்மை ஒன்றுபடுத்திய தோழர் TMTCLU  மாநிலத் தலைவர் தோழர் R K அவர்களுக்கும், மூத்த தலைவர் மதுரை சேது அவர்களுக்கும் நன்றி.

தெரிந்தோ, தெரியாமலோ உருவாக்கப்பட்டுவிட்ட ஒப்பந்தத் தொழிலாளர் சங்கங்களை இணைப்பதற்காக அதற்கு ஆதரவு அளித்த முக்கியத் தலைவர்கள் இன்று அதை முதன்மைக் கடமையாக ஏற்று செயலாற்றி வருகிறார்கள்.
NFTCL சங்கத்தின் செயல் தலைவராக விளங்கிய தோழர். V. மாரி அவர்களும், TMTCLU சங்கத்தின் மாநிலச் செயலாளராக உள்ள தோழர் R. செல்வம் அவர்களும் இணைந்து, இனி தமிழகத்தில் ஒரே சங்கமாக ஒப்பந்தத் தொழிலாளர் அமைப்பை உருவாக்கவிருக்கிறார்கள். வருகின்ற 19-01-19 அன்று, நமது தமிழ் மாநிலச் சங்க அலுவலகத்தில் அந்த நிகழ்வு நடைபெறவுள்ளது.

வரலாற்றுச் சிறப்பு மிக்க அப் பணியை வெற்றிகரமாக செய்து முடிப்போம், நமக்கென்று அகில இந்தியச் சங்கம் உருவான பின் அதனுடன் நமது மாநில அமைப்பையும் இணைப்போம்.

ஏற்கனவே, சென்னையில் நாம் பேரணி (நாம் மட்டும் தான் ) நடத்தியிருக்கிறோம். உண்ணாவிரதம், காத்திருப்பு போராட்டம், ஆர்ப்பாட்டம் ஆகியவைகளை நடத்தியது மட்டுமல்ல, உடன்பாடும் கண்டிருக்கிறோம்.
திறமை, தகுதி வாய்ந்த தமிழகம் என்ற கூடாரத்துக்குள் புகுந்த தோழர்களை, தடுக்க வேண்டாம் என்று நினைத்து அனுமதித்தோம். அது கூடாரத்தையே காலி செய்யும் ஒட்டகம் என்று தெரிந்தும் பார்த்துக் கொண்டிருக்க முடியுமா. அதனால்தான் இன்றைக்கு தடையாணை போடவேண்டிய அவசியம் ஏற்பட்டது.
எனவே, நமக்கு யாதொருவிதமான இழிநிலையும் இல்லை, தடையும் இல்லை.
பொய்யான தகவல்களை பரப்புபவர்களிடம், நாம்தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், அதற்கு சரியான பதிலையும் தர வேண்டும்.

தஞ்சையில் நாங்கள் என்ன செய்தோம்?
தமிழகத்திலேயே TMTCLU விற்கு மாவட்ட அமைப்பினை தொடங்கிய முதல் மாவட்டம் தஞ்சை மாவட்டம். அப்போதைய மாநிலத் செயலர் தோழர். மாலி அவர்கள். அப்போது மாநில உதவிச் செயலராகவிருந்த தோழர் பட்டாபி அவர்களின் வழிகாட்டுதலோடு தஞ்சை மாவட்டத்தில் 2005 பிப்ரவரி 6 ல் துவங்கப்பட்டது. மாவட்டச் செயலராக இருந்த நடராஜன் அவர்களால் மன்னைத் தோழர்களின் பெரும் பங்களிப்பால் அது துவங்கப்பட்டது. மன்னையில் நடந்த அம் மாநாட்டில் தஞ்சை மாவட்டச் சங்கத்தின் தலைவராக தோழர் பிரின்ஸ், செயலராக தோழர் கிள்ளிவளவன், பொருளாராக தோழர் சிவசிதம்பரம் ஆகியோர் பொறுப்பேற்றனர். அன்றைக்கு நாம் அங்கீகாரத்தில் இல்லாமல் இருந்தோம். அப்போதைய தஞ்சை GM திரு. சத்தியநாராயணா அவர்கள் தலைமையிலான நிர்வாகம் ஒப்பந்தத் தொழிலாளர்கள் உங்கள் உறுப்பினர் கிடையாது, அவர்களுக்கான பேச்சுவார்த்தையை நீங்கள் நடத்தக் கூடாது, இந்தப் பகுதியில் அவர்களுக்காக கூட்டமும் நடத்தக் கூடாது என்று நீதிமன்றம் மூலம் நமது சங்கத்திற்கு வக்கீல் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. அதை எதிர்த்து தடையை மீறி பாலாஜி நகர் GM ஆபீசில் கூட்டம் நடத்தினோம். நமது அண்டை மாவட்டமான காரைக்குடி மாவட்டச் செயலர் தோழர். மாரி அவர்களை வாழ்த்துரைக்க அழைத்திருந்தோம். தஞ்சை DSP பெரும் போலீஸ் படையோடு வந்து நம்மை கலைந்து போக வலியுறுத்தினார். அந்தத் தடையை மீறி அந்தக் கூட்டத்தை தோழர்கள் வீரபாண்டியன், KSK, பட்டாபி ஆகியோர் முன்னிலையில் வெற்றிகரமாக நடத்தியவர்கள் தஞ்சை மாவட்டத் தோழர்கள். பின்னர் வக்கீல் நோட்டீஸ் பெற்றுக் கொண்டு வழக்குரைஞர் மூலமாக அதைச் சந்தித்து நிர்வாகத்தை முறியடித்தோம். வரலாறு முக்கியம் தோழர்களே!
இன்றைக்கு அவர்கள் வாங்கும் 7000, 10000 சம்பளம் எல்லாம் சும்மா வந்ததல்ல. சம்பள உயர்வு வரும் தகவல்களையெல்லாம் பட்டாபி அவர்கள் எடுத்துக் கொடுத்து நிர்வாகத்துடன் பேசச் சொல்வார். பேசி அதை உடன் அமுல்படுத்தும் மாவட்டமாக தஞ்சை இருக்கும். அன்றைக்கு, 2006 லேயே, சங்கம் ஆரம்பித்த அடுத்த ஆண்டே போனசை தொழிலாளிக்குப் பெற்றுத் தந்தவர்கள் நாங்கள். BSNLEU மாவட்டச் செயலர் தோழர் ராஜேந்திரன், TNTCWU மாவட்டச் செயலர் சுந்தரராஜன் ஆகியோருடன் இணைந்து 750 ரூபாய் போனஸ் பெறுவதற்கு ஒப்பந்ததாரர்களிடம் கடுமையாகப் போராடினோம். அவர்கள் 500, 250 என்று இரு தவணையாகத்தான் தரமுடியும் என்றபோது இரு மாநிலச் செயலர்கள் பட்டாபி, செல்லப்பா ஆகியோரின் தலையீட்டில் அதை ஏற்றுக் கொண்டோம். அந்தப் பேச்சு வார்த்தையில் நம்மோடு உடன் வந்தவர்கள் NFTE மாவட்டச் செயலர் நடராஜன், மாவட்டப் பொருளர் ரெங்கசாமி.
எங்கள் ஒப்பந்தத் தொழிலாளிக்கு, சம்பளத்தையும், போனசையும் தொடர்ந்து போராடி உயர்த்திப் பெற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கும் சங்கம் NFTE யும் TMTCLU வும்தான்.
இந்தச் சூழலில் சம்பளமே பெற்றுக் கொடுக்காமலும், 1000 ரூபாய் நன்கொடை பெற்று, அவர்களுக்கே ரூ. 300 க்கு கறிவிருந்து கொடுத்து போட்டி மாவட்ட அமைப்பை உருவாக்கிய சங்கம் நாம் அல்ல. அப்படி வாங்கிய காசுக்கு இன்றுவரை முறையான கணக்கு கொடுக்காதவர்களைக் கொண்ட சங்கமும் நாம் அல்ல. உருப்படியாக எதையும் செய்ய முடியாத ஒரு அமைப்புக்கு 2 லட்ச ரூபாய்க்கு மேல் செலவு செய்யும் அவசியம் என்ன? பாரம்பரியம் மிக்க NFTE இம்மாதிரி காரியத்தை ஒரு போதும் செய்ததில்லை.

மாறும் என்ற ஒற்றைச் சொல்லைத்தவிர மற்றவையெல்லாம் மாறும் என்ற மார்க்சின் கருத்தை மெய்ப்பித்துக் காட்டிய மாரியைப் போல் மாற்றத்தை உருவாக்குவோம். மதியால் விதியை வெல்லலாம் என்பதெல்லாம் பழைய கதை. மதியால் நல்லவற்றை மடை மாற்றம் செய்வதுதான் ஆனந்தம். ஆனந்தம் என்பது பெயரளவில் இருப்பது அல்ல. அதை என் தொழிலாளிக்கு அள்ளிக் கொடுப்பேன், அதற்காகவே உழைப்பேன் என்பதுதான் ஆனந்தம்.

இத்தகைய எதிர்பார்ப்பில்லாது நம்மோடு இணைந்து உழைக்கின்ற ஒப்பந்தத் தொழிலாளிக்கு தொடர்ந்து உழைப்போம்!
எப்படியோ ஒன்று சேர போகிறோம் என்ற வாய்ப்பு வந்து வாசலைத் தட்டும்போது கடைசி முயற்சியாக நம்மை வசை பாடிய விமர்சனத்திற்கு பதிலாகவே, இந்தப் பதிவை முன்வைக்கிறோம்!

வாழ்த்துக்கள் தோழர்களே!
அன்புடன்,
கே. கிள்ளிவளவன்,மாவட்டச் செயலர், NFTE.

டி. கலைச்செல்வன்,
மாவட்டச் செயலர், TMTCLU.

No comments:

Post a Comment

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR