தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Saturday, December 23, 2017


அனைவருக்கும் இனிய 
கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்கள்.

2. கிறிஸ்துமஸ்... ஏன் நடந்தது?  
கிறிஸ்துமஸ் என்பது கடவுளே மனுஷனாக இந்த உலகத்திற்கு வந்த ஒரு சம்பவம் என்பதைப் பார்த்தோம். அவர் ஏன் வந்தார்? அவர் "மனுக்குலத்தை இரட்சிக்க மனிதனாக பூமிக்கு வந்தார்" என்று வேதம் கூறுகிறது. மனுக்குலத்திற்கு ஏன் இரட்சிப்பு தேவை? மனுக்குலத்தின் பிரச்சினை என்ன?
கடவுள் எல்லாவற்றையும் மனிதனுக்காக உண்டாக்கினார். ஆனால் மனிதனையோ, அவர் தமக்காக உண்டாக்கினார். ஆகவேதான் அவனை தமது 'சாயலின்படியும்', தமது 'ரூபத்தின்படியும்' சிருஷ்டித்தார் என்று வேதம் கூறுகிறது. அவரோடு ஐக்கியம் கொண்டு, அவரோடு நெருங்கி வாழ்வதற்காகத்தான் நாம் அவரைப் போலவே சிருஷ்டிக்கப்பட்டிருக்கிறோம். அவர் தனக்காகவே நம்மை சிருஷ்டித்தபடியால், அவருக்காக வாழ்வதுதான் நமது வாழ்க்கையின் பிரதான நோக்கமாக இருக்க வேண்டும். ஆகவே மனிதன் அப்படி வாழாவிட்டால் மனித வாழ்க்கையே அர்த்தமற்றதாகி விடும். இதுதான் மனுக்குலத்தின் பிரச்சினை.
மனிதன் இன்றைக்கு இந்த விதத்திலே வாழுகிறவனாக இல்லை. உன்னுடைய வாழ்க்கையின் அர்த்தமென்ன? நீ எதற்காக வாழ்ந்து கொண்டிருக்கிறாய்? என்று கேட்டால், நான் கடவுளுக்காகவே, கடவுளுடன் ஐக்கியம் கொள்ளும்படியாகவே, அவருடைய நோக்கங்களுக்காகவே வாழ்கிறேன் என்று சொல்பவர்களை பார்க்க முடியாது. நான் இதற்காக வாழ்கிறேன், அதற்காக வாழ்கிறேன் என்று பல நோக்கங்களுக்காக மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அதையும் இதையும் தேடி, அதையே தங்கள் வாழ்வின் நோக்கமாகக் கொண்டு அதற்காக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
இது ஒவ்வொரு மனுஷனுடைய மனதிலும் ஒரு வெறுமையையும், விரக்தியையும், சலிப்பையும் உண்டாக்கி விடுகிறது. தங்களுடைய வாழ்க்கை அர்த்தமற்றதாகி விட்டது போல எண்ணுகிறார்கள். ஆம்! நாம் எதற்காக உண்டாக்கப்பட்டோமோ, அதற்காக வாழும்போதுதானே நம் வாழ்க்கைக்கு அர்த்தமுண்டாக முடியும். உதாரணத்திற்கு, கார் நாம் பிரயாணம் செய்ய வேண்டும் என்கிற நோக்கத்திற்காக உண்டாக்கப்பட்ட ஒரு வாகனம். அதை ஒரு மூலையில் மழையிலும், வெயிலிலும் நிறுத்தி, அதில் பூனைகளும், நாய்களும் குடியிருந்தால் அது உண்டாக்கப்பட்ட நோக்கமே வீணாகிறது. காருக்கு மனம் என்று ஒன்று இல்லாததினால் அது வருத்தப்படப் போவதில்லை. ஆனால் மனிதன் அப்படி இல்லையே! அவன் கடவுளைப் போலவே ஒரு ஆவியாக இருக்கிறான். ஆனால் ஒரு சரீரத்தில் வாழ்கிறான். அவனுக்கு மனம் என்கிற ஆத்துமா உண்டு. ஆகவே அவன் இப்படிப் பயனற்ற ஒரு வாழ்க்கையில் திருப்தி அடையவே முடியாது. அவன் தன்னுடைய வாழ்க்கைக்கு அர்த்தத்தைத் தேடிக் கொண்டிருக்கிறான். அதைக் கண்டுபிடித்து அர்த்தமுள்ள விதத்தில் வாழும்போதுதான் அவனுக்கு ஆத்தும திருப்தி உண்டாகிறது.
கல்வி, வேலை, மனைவி, பிள்ளைகள், குடும்பம், பணம், பொருள் எல்லாம் இருந்தாலும் அவைகளால் மட்டும் அவன் திருப்தியடைய முடியாது. தன்னை உண்டாக்கின கடவுளோடு ஆழ்ந்த உறவு அவனுக்கு இருந்தால்தான் அவன் தன்னுடைய வாழ்க்கையின் நோக்கத்தை அறிந்து கொள்ள முடியும். கடவுளுடைய நோக்கங்களை நம்முடைய வாழ்க்கையில் நிறைவேற்றுவதற்காகத்தான் இவைகளெல்லாம் நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், கடவுளை ஆழமாய் அறிந்து கொள்ளாமல், அவரோடு நெருக்கமாக ஐக்கியம் கொள்ளாமல், அவருடைய நோக்கங்களை நாம் புரிந்து கொள்ள முடியாது. நோக்கங்கள் புரியவில்லையென்றால் வாழ்க்கை அர்த்தமற்றதாகி விடுகிறது. நமக்குள்ள எல்லாவற்றிற்கும் அர்த்தமில்லாமல் போய் விடுகிறது. ஆகவே எல்லாமிருந்தும் கடவுள் நம்முடைய வாழ்க்கையில் பிரதானமாக இல்லாவிட்டால், வாழ்க்கையே வெறுமையாகி விடுகிறது.
மனிதன் எப்படி இந்த நிலைக்கு வந்தான்? கடவுளால் சிருஷ்டிக்கப்பட்ட உலகின் முதல் மனிதனாகிய ஆதாம், தன்னுடைய மனம்போன போக்கிலே வாழ்ந்து, தன் விருப்பம்போல் வாழும்படியாக, கடவுளைத் தன்னுடைய வாழ்க்கையிலே இருந்து விலக்கி வைத்து, அவருக்கு தன் வாழ்வில் இடம் கொடுக்க மறுத்து விட்டான். இதுதான் மனிதன் செய்த பாவம். இந்தப் பாவத்தின் விளைவாக ஆதாமின் வம்சமாகிய மனுக்குலம் முழுவதும் இன்றைக்கு சகல தீமைகளாலும் பாதிக்கப்பட்டிருக்கிறது.
கடவுள் நமக்கு அவசியம் என்று நம்முடைய உள்ளம் சொல்லுகிறது. நாம் கடவுளுக்காகவே உண்டாக்கப்பட்டபடியால், கடவுளோடு ஐக்கியம் கொண்டு வாழ வேண்டும் என்பது நமக்குள் இயல்பாகவே இருக்கும் ஒரு நாட்டம். அந்த நாட்டத்தை திருப்திபடுத்துவதற்காக பல்வேறு மத வழிபாடுகளைப் பின்பற்றுகிறோம். ஆனால், கடவுளை அறிந்திருக்கிறோமா? இந்த வழிபாடுகள் மூலமாக கடவுளோடு நெருங்கி வாழ்கிறோமா? இவைகள் நம்முடைய வாழ்க்கையின் தரத்தில் ஒரு வித்தியாசத்தையும், மாற்றத்தையும் ஏற்படுத்தியிருக்கிறதா? அல்லது இவைகள் எல்லாம் வெறும் சடங்காச்சாரங்களாகவும், சம்பிரதாயங்களாகவும் மட்டுமே இருக்கிறதா?
உண்மையிலே நாம் கடவுளை அறிந்து, அவரோடு நெருங்கி வாழ்ந்தோம் என்றால், நம்முடைய வாழ்க்கையில் ஒரு பெரிய மாற்றத்தை நாம் காண முடியும். நம்முடைய வாழ்க்கை எவரும் நம்மிடத்திலிருந்து எடுத்துக் கொள்ள முடியாத மகிழ்ச்சியினாலும், மெய்யான சமாதானத்தினாலும் நிறைந்திருக்கும். நம்முடைய குடும்ப வாழ்க்கையிலும் மகிழ்ச்சியும், நிறைவும் உண்டாயிருக்கும்.
உண்மை, ஒழுக்கம், ஞானம், அறிவு, விவேகம் எல்லாமே நமக்குள் நிறைந்திருக்கும். நம்முடைய வாழ்க்கைத் தரமே உயர்ந்த விதத்தில் இருக்கும். அதுமட்டுமல்லாமல், நம்முடைய தோல்விகளை வெற்றிகளாக மாற்றக்கூடியவர்களாக நாம் இருப்போம். வாழ்க்கைப் பிரச்சினைகளை நம்பிக்கையோடு எதிர்கொண்டு கடவுளுடைய அளவற்ற கிருபையாலும், அவருடைய ஒத்தாசையினாலும் அவைகளின் மீது ஜெயத்தை எடுப்போம். நம்முடைய கையின் பிரயாசங்களில் எல்லாம் கடவுளின் ஆசீர்வாதத்தைக் காண முடியும். நாம் அவருக்காக வாழ்ந்து, அவருடைய நோக்கங்களை நிறைவேற்றுவதால் நாம் செய்கிற காரியங்களெல்லாம் வாய்க்கும். வாழ்க்கை முழுவதற்குமே அர்த்தமிருக்கும்.
நம்மிடம் இருக்கும் கல்வி, வேலை, பணம், பொருள் போன்ற எல்லா ஆதாரங்களையும் நல்ல விதத்திலே நாம் பயன்படுத்துவோம். ஒரு பெரிய குறிக்கோளோடும், தொலைநோக்கோடும் வாழ்வோம். வாழ்க்கையைக் குறித்து ஒரு பெரிய எதிர்பார்ப்பு நமக்குள் இருக்கும். பெரிய விதத்தில் சிந்திப்போம், பெரிய காரியங்களை எதிர்பார்ப்போம். இவைகள்தான் ஒரு உண்மையான ஆன்மீக வாழ்வின் அறிகுறிகள்.
இதில் இன்னொரு முக்கியமான அம்சமும் உண்டு. நம்முடைய உலக வாழ்க்கை முடிந்து, இந்த பூமியில் நாம் கண்ணை மூடும்போது கூட, மரண பயம் என்பது நமக்குள் சிறிதளவும் இருக்காது. மாறாக, நம்முடைய வாழ்க்கை ஓட்டத்தைச் சரியாக ஓடி முடித்தோம் என்கிற திருப்தி நமக்கு இருக்கும். அதோடுகூட, மறுமையில் நம்முடைய வாழ்க்கையை கடவுளோடுகூட நிரந்தரமாகத் தொடருவோம் என்ற நம்பிக்கையும் நமக்கு இருக்கும். இந்த உலகத்தை விட்டுச் செல்லுகிற நாம் எங்கே செல்லுகிறோம், எங்கே நம்முடைய நித்தியத்தை கழிப்போம் என்கிற நிச்சயமும் நமக்குள் இருக்கும். கடவுளை விட்டுத் தூரமாகப் போய், கடவுளுக்காகவே நாம் சிருஷ்டிக்கப்பட்டிருக்கிறோம் என்பதை அறியாமல், கடவுளுக்காக வாழ்வதற்குப் பதிலாக, மற்றெல்லாவற்றையும் பெரிதாக எண்ணி வாழ்கிற மனிதனிடத்தில் இதையெல்லாம் காண முடியாது. அவனது வாழ்க்கை அர்த்தமற்றதாகி விடுகிறது. இந்த நிலையிலிருந்து நம்மை மீட்டு, கடவுளோடு நமக்கு ஒரு இணைப்பை உண்டுபண்ணிக் கொடுத்து, ஒரு புதிய வாழ்க்கையையும், புதிய எதிர்காலத்தையும் நமக்குத் தரும்படியாகத்தான் மீட்பர் இயேசு உலகத்திற்கு வந்தார்.
அவர் இந்த உலகத்திற்கு மனிதனாய் வந்ததின் மூலம் கடவுள் எப்படிப்பட்டவர் என்பதை நாம் காண முடிகிறது. "என்னைக் கண்டவன் கடவுளை கண்டிருக்கிறான்" என்று இயேசுவே சொல்லியிருக்கிறார். அதுமட்டுமல்லாமல், நமக்கு கடவுளைக் குறித்துப் போதித்து, கடவுளை நமக்கு அவர் வெளிப்படுத்தினார்.
இவை எல்லாவற்றைக் காட்டிலும், நம்முடைய பாவத்தையும், அதற்கான தண்டனையையும் தன் மீது சுமந்து, நம்முடைய பாவநிவாரண பலியாக சிலுவையிலே மரித்ததால் நம்மை பாவத்திலிருந்து விடுதலையாக்கி புதுவாழ்வை நமக்குத் தந்தார். இவ்வாறாக கடவுளுடைய அன்பை இயேசு நமக்கு முழுமையாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
ஆகவேதான் கிறிஸ்துமஸ் தினத்தில் பாடல்களைப் பாடி, கடவுளுக்கு நன்றி செலுத்தி, ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியைத் தெரிவித்து, இயேசு கிறிஸ்து மூலமாய் மனிதனுக்காக கடவுள் ஏற்படுத்தின இரட்சிப்பை உலகெங்கும் உள்ள மக்கள் விமரிசையாகக் கொண்டாடுகிறார்கள். இதுதான் கிறிஸ்துமஸ்!


No comments:

Post a Comment

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR