தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Thursday, December 6, 2012



21 ஆம் நூற்றாண்டின் சிகரெட்  --   செல்போன்.

ஆண்டுகள் செல்லச் செல்ல செல்போனும், செல்போன் டவர்களும் வெளிப்படுத்தும் கதிர்வீச்சு, சிகரெட் ஏற்படுத்துவதைவிடக் கடுமையான பாதிப்புக்களை ஏற்படுத்துகின்றது என்று புதிய அறிக்கைகள் வெளிப்படுத்துகின்றன.
நாடு முழுவதிலும் இதைப் பற்றிய குற்றச்சாட்டுகள் எழுந்ததன் பயனாய் செப்டம்பர் 1 முதல் தொலைபேசித் துறை கைபேசியின் கதிர் வீச்சுகளுக்கும், கைபேசி கோபுரங்களிலிருந்து வெளிவரும் கதிர்வீச்சின் அளவான S A R  இரண்டிலிருந்து 1.6 க்குக் குறைக்க வேண்டும்.  கை பேசி கோபுரத்தினுடைய பரப்பும் தன்மை இப்பொழுது உள்ளதைவிட பத்தில் ஒன்றாய்க் குறைக்க வேண்டும் என்னும் உத்தரவுகள் போடப்பட்டுள்ளன.
கை பேசியைத் தொடர்ந்து உபயோகப்படுத்துவதன் மூலம் புற்றுநோய் வருகிறது என்று உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.   அல்சிமேர்ஸ் என்னும் மறதி நோயும் பார்வைக் குறைவு, கேட்கும் சக்திக் குறைவு போன்ற பிரச்சனைகள் முதல் மனநோய்கள் வரை ஏற்படும் என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
கைபேசி கோபுரங்கள் என்னும் வில்லன்கள்
     கைபேசியின் கதிர்வீச்சுப் பிரச்னை அதை உபயோகிப்பவர்களை மட்டுமே பாதிக்கும்.   கைபேசியை உபயோகிக்காதவர்களையும் கூட கோபுரங்களில் இருந்து வரும் கதிர்வீச்சு பாதிக்கும்.   கோபுரங்களில் இருந்து   400 முதல்  500 மீட்டர்  தூரத்திற்கு  அப்பால்  இருப்பது பாதுகாப்பானது.
     காக்கைகள் போன்ற பறவைகளினுடைய எண்ணிக்கை குறைந்து கொண்டிருக்கின்றது.   பசு பால் கறப்பது குறைகின்றது.   பொரிக்காத கோழி முட்டைகளினுடைய எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டுள்ளது.  இப்படி கோபுரத்திலிருந்து வெளிப்படும் கதிர் வீச்சினுடைய பிரச்சினைகள் அதிகமாகிக் கொண்டிருக்கின்றது.
     அருகருகே பல கோபுரங்களை நிறுவுவதும் பல வியாபார நிறுவனங்கள் ஒரே கோபுரத்தை உபயோகிக்கவும் செய்கின்ற நம் நாட்டில் எதார்த்தமான நிலைமை மிக பயங்கரமானதாயிருக்கும்.  கோபுரத்தினுடைய கதிர்வீச்சு மிரட்டல் குறைவதற்கு அரசாங்கங்களின் தலையீடு அவசியம்.   ஆனால், கைபேசி கதிர்வீச்சை நம்மால் தடுத்துக் கொள்ள முடியும்.
சிட்டுக்குருவிகள் எங்கே போயின?
     ஓர் இடம் மனிதர்கள் வாழ்வதற்கு ஏற்றதா என்பதைத் தெரிந்து கொள்வதற்கான மிக எளிமையான வழி, அந்தப் பகுதியில் சிட்டுக் குருவிகள் போலுள்ள சிறு பறவைகள் வசிக்கின்றனவா என்பதை அறிந்து கொள்வதுதான்.   குருவிகள் வசிக்கும் ஒரு கூடு இருக்கிறதென்றால் அங்குள்ள காற்றும் நீரும் தாவரங்களும் சுத்தமாக இருக்கின்றனவென்று நாம் உறுதியாகச் சொல்லலாம்.   ஆனால், கைபேசிக் கோபுரங்களின் வரவிற்குப் பிறகு சுற்றுப்புறத்தினுடைய இந்த நிலை தலைகீழாக மாறியுள்ளது.   ஒரு கைபேசிக் கோபுரம் நிறுவப்பட்டால் குருவிகள் அந்தப் பகுதியில் இருந்து போய்விடுமென்றும், கூடுகளில் உள்ள முட்டைகள் பொரிக்காமல் போகுமென்றும் சுற்றுப்புற ஆராய்ச்சியாளரும் கொல்லத்தைச் சேர்ந்த எஸ். என் கல்லூரி ஆசிரியருமான டாக்டர் சைனுதீன் பட்டாபி பதிவு செய்துள்ளார்.
     தேனீக்களும் மற்ற உயிரணுக்களெல்லாம் கோபுரத்தைச் சுற்றிலுமுள்ள ஒரு கிலோமீட்டர் எல்லையைவிட்டு வெளியேறிவிடுகின்றன.   கோபுரத்திலிருந்து வரும் சக்தி வாய்ந்த கதிர்வீச்சுத்தான் இதற்குக் காரணமென்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.   இவற்றைச் சுட்டிக் காட்டும் டாக்டர் சைனுதின் பட்டாபி உறுப்பினராக உள்ள நிபுணர் குழுவின் அறிக்கையின் காரணத்தாலும கதிர் வீச்சிற்கு மத்திய அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது.   அணில்களுக்கும் கதிர்வீச்சு பெரும் மிரட்டலாக உள்ளது.

கதிர் வீச்சிலிருந்து பாதுகாத்துக்கொள்ள 10 வழிகள்
     சில முன்னெச்சரிக்கைகளை கைக்கொண்டால் கைபேசி உபயோகிப்பதால் வரும் பிரச்சனைகளிலிருந்து 90 சதவீதம் நாம் தப்பித்துக் கொள்ளலாம்.   குழந்தைகளின் மண்டையோட்டின் கனம் குறைவாக இருக்கும் என்பதால் அவர்களுக்கு கதிர்வீச்சின் பாதிப்பு மிக அதிகமாயிருக்கும்.   அதனால் குழந்தைகள் அதை உபயோகிக்க அனுமதிக்கக் கூடாது.
1. பேசும் நேரம்
     பேசியில் பேசுவதைவிட குறுந்தகவல்களை அனுப்பி, பேசும் நேரத்தைக் குறைத்துக் கொள்ள வேண்டுமென்று மத்திய டெலிகாம் துறை அறிவிக்கின்றது.   கைபேசியை காதுடன் சேர்த்து வைத்துப் பேசுவதினுடைய அளவை முடிந்தவரை குறைக்க வேண்டும்.  ஒரு நாளில் ஆறு நிமிடங்களுக்கு மேல் கைபேசியை காதுடன் சேர்த்து வைத்துப் பேசக்கூடாது.   தவிர்க்க முடியாத நீன்ட நேரம் பேச வேண்டிய சந்தர்ப்பத்தில் உள்ளோர் இரண்டு நிமிடங்களுக்கு ஒரு முறை பேசியை இரண்டு காதுகளிலும் மாற்றி மாற்றி வைத்துப் பேச வேண்டும்.
2. பேசியைப் பிடிக்கும் தூரம்
     ஓர் அங்குல தூரத்தில் பேசியைப் பிடிக்க வேண்டும்.   பேசியின் இரண்டு அங்குலச் சுற்றளவில்தான் கதிர்வீச்சின் தீவிரம் அதிகமாக இருக்கும்.   பேசியை அழுத்தி வைத்துப் பேசும்போது மூளைக்குள் துளைத்துச் செல்லும் கதிர்வீச்சினுடைய அளவு அதிகரிக்கும்.   இதைத் தவிர்ப்பதற்கு பேசியை காதிலிருந்து சற்றுத் தள்ளிப்பிடிப்பது நல்லது. பேசியை காதிலிருந்து ஓரங்குலம் தள்ளி வைக்கும் பொழுது கதிர்வீச்சுத் தாக்குதல் பாதியாக்க் குறைவதாக அறிக்கைகள் சொல்கின்றன.
3. ஹேண்ட்ஸ் ப்ரீ
     உடம்பிலிருந்து குறைந்த்து 15 சென்டிமீட்டர் தூரத்திலாவது பேசியைத் தள்ளி வைத்து ஸ்பீக்கர் போனில் பேசுவது ஒரு சிறந்த வழி.   சொந்த செய்திகளைப் பேசுவதற்கும், பொது இடங்களிலும் இது சாத்தியமில்லாத ஒன்று.   அந்நிலையில் ஹேண்ட் பிரி ஹெட் செட்டுகளைப் பயன்படுத்தலாம்.   ஒயர் உள்ள ஹெட்செட், புளூ டூத் ஹெட்செட் என இரண்டு வகைகள் உள்ளன.   இவை நூறு சதவீதம் பாதுகாப்பானவை என்று பலரும் கருதுகிறார்கள் என்றாலும் உண்மை அதுவல்ல.   இவற்றின் வழியாகவும் குறைந்த அளவு கதிர்வீச்சு உடலுக்குள் செல்கின்றது.   அதனால் த்ரம் வாய்ந்தவைகளை வாங்க முயற்சிக்க வேண்டும்.   காதுகளுக்குள் சொருகி வைக்க்க் கூடியவைதான் தெளிவாகக் கேட்கக் கூடியவை என்றாலும் அப்படி இல்லாதவைதான் நல்லனவாகும்.
4. ஹெட்செட்டை உபயோகிக்கும் விதம்
     எந்த ஹெட்செட்டை உபயோகித்தாலும் கேட்கக் கூடிய அளவு மிகக் குறைந்த சத்தத்தில் பயன்படுத்த வேண்டும்.  பேசி முடித்தவுடன் காதிலிருந்து எடுத்து விட வேண்டும்.
     புளூ டூத் ஹெட்செட் உபயோகிக்கின்ற பலரும் அதை ஒரு உடலுறுப்பு போலவே எப்பொழுதும் உடலில் ஒட்டி வைத்தபடி இருப்பதுண்டு. பேசி முடித்தவுடன் அதை உடலிலிருந்து கவனமாய் அப்புறப்படுத்தி வைக்க வேண்டும்.
5. ரிட்ரோ ஹேண்ட்செட்
     ஹெட்செட்டிற்குப் பதிலாக விற்பனை செய்யப்படும் மற்றொரு உபகரணம் இது.   சாதாரண தொலைபேசியில் உள்ளதைப் போல ரிசீவர் போன்ற உபகரணத்தை கைபேசியுடன் இணைத்துப் பாதுகாப்பாய் பயன்படுத்தலாம்.   எடுத்துச் செல்ல வசதிப்படாது என்றாலும வீட்டிலும் அலுவலகத்திலும் பயன்படுத்தலாம்.
6. ரேஞ்ச் குறையும் நேரம்
            கைபேசியில் சிக்னல் குறைவாயுள்ள சமயத்தில் பேட்டரி சார்ஜ் வேகமாய் குறையும்.   சிக்னலைப் பெறுவதற்காக கைபேசி அதிக ஆற்றலை செலவிடுவதுதான் இதற்குக் காரணம்.   இந்தச் சமயத்தில் பேசியிலிருந்து அதிக அளவு கதிர்வீச்சு இருக்கும்.  அதனால் ரேஞ்சு குறைவாயிருக்கும்பொழுது பேசியைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.   தொடர் வண்டி, கார் போன்ற உலோகத்தால் மூடப்பட்டுள்ள வாகனங்களில் பேசியை உபயோகிக்கும்பொழுதும் பரவுதல் அதிகமாய் இருக்கும்.   அந்தச் சந்தர்ப்பங்களில் கண்டிப்பாக ஹேண்ட் ப்ரீ கருவிகளை உபயோகப்படுத்த வேண்டும்.
7. தலைக்கருகில் வைத்துப் படுக்கக் கூடாது
     படுக்கும்பொழுது தலையணைக்கு அடியிலோ, தலைக்கருகிலோ பேசியை வைக்கும் வழக்கம் பலரிடமும் காணப்டுகின்றது.   தொடர்ந்து இப்படிச் செய்தால் தூக்கம் குறைவு,   விடாத தலைவலி முதல் தீவிரமான கதிர்வீச்சுப் பிரச்சனைகள் வரை அனுபவிக்க வேண்டிவரும்.   அதனால், உடலில் இருந்து, குறிப்பாக ஒரு மீட்டர் தூரத்திலாவது பேசியைத் தள்ளிவைக்க வேண்டும்.
8. ஈரமான தலைமுடியும் கண்ணாடியும்
     குளித்து முடித்து ஈரமான தலைமுடியுடன் கைபேசியை உபயோகிக்க வேண்டிய நிலை பலருக்கும் ஏற்படக்கூடும்.   இனி அது வேண்டாம்.   ஈரமாக உள்ள தலைமுடி கதிர்வீச்சை ஈர்க்கும் அளவு இரண்டு மடங்காக அதிகரிக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள்.   அது போலவே உலோகச் சட்டமுள்ள கண்ணாடி அணிந்திருப்பவர்கள் கைபேசியில் பேசும் பொழுது கண்ணாடியைக் கழட்டி வைத்து விட வேண்டும்.   கண்ணாடியினுடைய உலோகச் சட்டம் கதிர்வீச்சின் அளவை அதிகரிக்கும்.
9. நெஞ்சுடன் சேர்த்து வைக்கக் கூடாது
     பேசும்பொழுது மட்டுமன்றி அது ஆன் ஆகியிருக்கும் எல்லா நேரமும் கதிர்வீச்சு இருந்து கொண்டேயிருக்கும்.   சட்டையின் பாக்கெட்டில் பேசியை வைப்பது இதயத்தையும். கால்சட்டையின் பாக்கெட்டில் வைப்பது ஆண்மைக் குறைவையும் ஏற்படுத்துமென்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.   பேசியை உடலிலிருந்து ஓர் அங்குலமாவது தள்ளி வைக்க வேண்டும்.   இதய இயக்கத்தினை முடுக்கிவிடும் கருவி (PACE MAKER)யைப் பொருத்தியுள்ளவர்கள் பேசியை நெஞ்சிலிருந்து குறைந்த்து 30 செ.மீ தூரத்தில் வைக்க வேண்டும்.   கர்ப்பிணிகள் கைபேசியை வயிற்றின் அருகில் கொண்டு போகவே கூடாது.
10. குறைந்த சார்ஜீம் கைபேசிப் பையும்
     பேட்டரி சார்ஜ் குறைவாயுள்ள பேசியில் கதிர்வீச்சு அதிகமாயிருக்கும் என்பதால் சார்ஜினுடைய கடைசிக் கட்டத்தில் அதிக நேரம் பேசக்கூடாது.   உலோகத்தால் ஆன கைபேசிப் பைகள், காந்தம் கலந்துள்ள பைகள் ஆகியவைகளால் கதிர்வீச்சின் தீவிரம் அதிகரிக்கும்.   பையிலிருந்து வெளியில் எடுத்து உபயோகிக்கும் பேசிகள்தான் நல்லது.
     கைபேசியின் பின்பக்கத்தில்தான் கோபுரத்திலிருந்து அலைகளை ஏற்றுக்கொள்ளும் ரிசீவர் உள்ளது.   சிலர், பேசியை கைக்குள் மறைத்துப் பிடித்தபடி பேசுகின்றனர்.  பேசிக்கும் கோபுர சிக்னலுக்கும் இடையில் உள்ளங்கை ஒரு தடுப்பாய் மாறும்பொழுது கதிர்வீச்சின் தீவிரம் அதிகரிக்கும்.   அதனால் கைபேசியின் பின்பகுதி முழுவதும் வெளியில் தெரியும்படி பிடித்துக் கொண்டுதான் பேச வேண்டும்.

நன்றி: ஜனசக்தி நாளிதழ் 4/12/2012
கட்டுரையாளர்: மு.ந. புகழேந்தி

Wednesday, November 28, 2012

ஈயமும் பித்தளையும்!

First Published : 27 November 2012 12:35 AM IST
சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி வழங்கியதற்கு எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வருவதால் நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் தொடர்ந்து மூன்றாம் நாளாக முடங்கியது.
 இப்பிரச்னைக்கு சுமுகத் தீர்வுகாண, திங்கள்கிழமை நடத்தப்பட்ட அனைத்துக் கட்சிக் கூட்டத்திலும் எந்த உடன்பாடும் ஏற்படாததைக் காணும்போது, சென்ற மழைக்காலக் கூட்டத் தொடர் போல, குளிர்காலக் கூட்டத் தொடரும் ஒரு பணியும் நடைபெறாமலேயே முடிந்துபோகுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது.
 நாடாளுமன்ற நடைமுறை விதிஎண் 184-ன் கீழ், இந்தப் பிரச்னை தொடர்பாக விவாதம் நடத்தவும், வாக்கெடுப்பு நடத்தவும் வேண்டும் என்று பாஜக தொடர்ந்து வலியுறுத்துகிறது. மத்திய அரசோ, விதி எண் 193-ன் கீழ் விவாதம் நடத்தலாம், ஆனால்  வாக்கெடுப்பு தேவையில்லை என்று சொல்கிறது. விவாதத்தை இரண்டு தரப்பும் ஏற்றுக்கொண்ட நிலையில், "வாக்கெடுப்பு' பிரச்னையாவதற்குக் காரணம் அரசியல்தான்.
 விதிஎண் 184-ன் படி பாஜக கோரிக்கையை அரசு ஏற்கும் என்றால், வாக்கெடுப்பு நடத்த அரசு ஏன் தயங்க வேண்டும் என்று கேட்கலாம். மத்திய அரசு இதற்கு இணக்கம் தெரிவிக்கத்தான் போகிறது. ஆனாலும், எதிரியை வேண்டுமென்றே முன்னேறவிட்டு, பிறகு தாக்கித் தோல்வியுறச் செய்யும் உத்தியை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி கையாளுகிறது என்றுதான் தோன்றுகிறது.
 சில்லறை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு வெளிப்படையான எதிர்ப்புத் தெரிவித்திருக்கும் ஆளும் கூட்டணிக் கட்சிகள், வாக்கெடுப்பில் எதிர்த்து வாக்களிக்கக் கூடும் என்பது எதிர்க்கட்சிகளின் எதிர்பார்ப்பு. அப்படியே அவர்கள் எதிர்க்காவிட்டாலும், குறைந்தபட்சம் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் புறக்கணித்து  அரசைக் காப்பாற்றக்கூடும். அதுவும்கூட அரசுக்குப் பின்னடைவுதானே என்பதும், அப்படிச் செய்வதால், திமுக, சமாஜ்வாதி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி போன்ற மாநிலக் கட்சிகளின் சில்லறை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டுக்கான எதிர்ப்பு போலித்தனமானது என்பது வெளிச்சம் போடப்படும் என்பதால், அவர்கள் அரசுக்கு எதிராக வாக்களித்துவிட மாட்டார்களா என்பதும்கூட எதிர்பார்ப்பாக இருக்கலாம்.
 விதி எண் 184-ன் படி விவாதத்துக்குப் பிறகு வாக்கெடுப்பு நடத்தினால், மத்திய அரசுக்கு தோல்வி ஏற்பட்டுவிடும் என்கிற நிலைமை இருப்பதுபோல ஒரு தோற்றம் காட்டப்படுகிறதே தவிர, நிலைமை அவ்வாறாக இல்லை. சிலருக்கு "விருந்தும்', சிலருக்கு "மருந்தும்'  ஏற்கெனவே கொடுக்கப்பட்டுவிட்டன. ஆகவே, வாக்கெடுப்பின்போது அவையில் இல்லாமல் வெளியேறும் கட்சிகளும், அரசுக்கு ஆதரவாக வாக்களிக்கப் போகும் கட்சிகளும் இந்த வாக்கெடுப்பை அரசுக்குச் சாதகமாகவே அமையச் செய்யும். தனது பாசறையை முதலில் ஒருமுறை சோதித்துப் பார்த்துக்கொள்வதற்கான காலஅவகாசம் பெறுவதற்காகவே, தற்போது வாக்கெடுப்புக்கு சம்மதம் தெரிவிக்காமல் அரசு இழுத்தடிக்கிறதே தவிர, வாக்கெடுப்புடன் கூடிய விவாதத்துக்கேகூட காங்கிரஸ் கட்சி நிச்சயம் சம்மதிக்கும் என்று நம்ப இடமிருக்கிறது.
 மத்திய அரசுக்கு இதனால் இன்னொரு ஆதாயமும் உண்டு. குளிர்காலக் கூட்டத்தொடரையும் முடக்குவதன் மூலம் எதிர்க்கட்சிகள் மீது மக்களுக்குள்ள வெறுப்பை அதிகப்படுத்த முடியும். அத்துடன், வாக்கெடுப்பு அரசுக்கு ஆதரவாக முடியும்போது, "இதற்காகவா இவ்வளவு நாள் நாடாளுமன்றத்தை முடக்கி வீணடித்தார்கள்?' என்று எதிர்க்கட்சிகளின் மீது மக்களுக்கு எரிச்சல் மேலும் அதிகரிக்கும். அதற்கான தந்திரமாகக்கூட இது இருக்கலாம்.
 சென்ற ஆண்டு, சில்லறை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அரசு அறிவித்தபோது அதைத் தடுத்து நிறுத்தியது, அப்போது மத்திய அரசில் இடம்பெற்றிருந்த திரிணமூல் காங்கிரஸ் மட்டுமே! கூட்டணியை விட்டுத் திரிணமூல் காங்கிரஸ் வெளியேறிய பிறகுதான் மத்திய அமைச்சரவை, சில்லறை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதித்தது.
 சில்லறை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிப்பது அந்தந்த மாநிலத்தின் விருப்பத்துக்கு உரியது. இதில் மத்திய அரசு தலையிட முடியாது என்று கூறியபோது, 10 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் எடுத்த எடுப்பில் ஆதரவு தெரிவித்துவிட்டன. அதன் பிறகு எதிர்க்கட்சிகள் நடத்திய கடையடைப்பு வேலைநிறுத்தம் மிகவும் பலமானதாக இருந்திருந்தால், மத்திய அரசு இந்த விவகாரம் குறித்து தனது முடிவை மாற்றிக்கொண்டிருக்கக்கூடும். ஆனால், உண்மை அவ்வாறாக இல்லை.
 அடுத்ததாக, இந்த விவகாரத்தில் மத்திய அரசு மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப் போவதாக திரிணமூல் காங்கிரஸ் தலைவி மம்தா இரு மாதங்களுக்கு முன்பே தெரிவித்தார். மேற்கு வங்கத்தில் தனது அரசியலை ஸ்திரப்படுத்திக்கொள்ளவே அவர் இந்த நாடகம் ஆடுகிறார் என்று குற்றம்சாட்டிய இடதுசாரிகள், நம்பிக்கை இல்லாத் தீர்மானத்திற்கு ஆதரவு தரமாட்டோம் என்று அறிவித்தனர், சரி. ஆனால், மற்ற கட்சிகள் ஏன் அவருக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை?
 நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரக்கூடிய எண்ணிக்கை பலம் பாஜகவுக்கு இருக்கும்போது, அவர்கள் ஏன் வாக்கெடுப்புடன் கூடிய விவாதத்தைக் கேட்டு, நாடாளுமன்றத்தை முடக்கிக் கொண்டிருக்க வேண்டும்? நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோல்வி கண்டால் எதிர்க்கட்சிகளுக்கு அவமானம். ஆனால், விதிஎண் 184-ல் தோற்றுப்போனால், அது வெறும் அன்னிய நேரடி முதலீட்டில் கட்சிகளிடையே கருத்துமாறுபாடு மட்டுமே! ஒருவேளை தீர்மானம் நிறைவேறினாலும், அதனால் ஆட்சி கவிழ்ந்துவிடப் போவதில்லை. இன்னும் ஆறு மாதத்திற்கு நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவர முடியாத நிலைமையை திரிணமூல் காங்கிரஸின் தீர்மானத்தை ஆதரிக்காமல் எதிர்க்கட்சிகள் ஏற்கெனவே ஏற்படுத்திக் கொடுத்துவிட்டன.
 ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் ரட்சகர்கள் வேறுயாருமல்ல, எதிர்க்கட்சிகள்தான். அதிலும் குறிப்பாக, பாஜகவும் இடதுசாரிக் கட்சிகளும்!

Monday, November 12, 2012





இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!

தீபங்களை வரிசையாக ஏற்றி வைத்து வணங்குதல் தீபாவளி ஆகும். 
தீபம் என்றால்வெளிச்சம். 
ஒவ்வொருத்தர் மனதிலும் ஒரு சில இருட்டு உள்ளது. 
அகங்காரம், பொறாமை, தலைக்கணம் போன்ற எதையாவது ஒன்றை தூக்கிப்போட வேண்டும். ஒரு தீய குணத்தையாவது  எரித்துவிட வேண்டும்.
நாம் புனிதமாவதற்குத்தான் வெடி வெடிக்கிறோம். 
அதாவது சில பொருட்களை அழிப்பதற்கு அதனை கொளுத்துகிறோம் அல்லவா! அதுபோன்றுதான் நமது மனதில் இருந்த தீய எண்ணங்களை வெடி வெடிப்பது போல் சிதறடித்துவிட வேண்டும் என்பதற்காக வெடி வெடிக்கிறோம்.
 











Saturday, November 10, 2012



நல்ல தொழிற்சங்கமும் நாமும்

    ஒரு நல்ல முதலாளி, நல்ல அரசு, நல்ல நிர்வாகம் நேர்மையான ஊழியர்கள், இருக்கும் வரை எந்த ஒரு தொழிலும், துறையும் யாதொருவிதமான சிக்கலுமின்றி சிறப்பாகவே இயங்கும், வளரும்.  காலப்போக்கில் மேற்கண்ட முறைமைகள் எல்லாம் தேய்ந்து வீணாகிய போதுதான் தொழிலாளிக்கு சிக்கல்கள் உருவானது.  தொழிற்சங்கம் அவசியமாயிற்று.
இந்திய தொழிற்சங்க வரலாற்றில் தொலைபேசித் தொழிலாளிக்கென மிகப் பெரிய பங்கு பாத்திரம் உண்டு. இன்றைக்கும் அன்றைய 68 போராட்ட தியாகத்தைக் கொண்டாடுகின்ற தொழிலாளியாக நமது தொழிலாளர்கள்தான் இருக்கின்றார்கள். பல பிரதம அமைச்சர்களை. மந்திரிகள் பலரை நேருக்கு நேர் சந்தித்து தொலைபேசித் தொழிலாளியின் பிரச்சனைகளைத் தீர்ப்பதில் தலையாய பங்கு வகித்த சங்கம் நமது N F T E சங்கம்.
இது போன்று அரசுக்கு மிகப் பெரிய சவாலாக இருந்த நமது சங்கத்தை உடைப்பதற்காக மத்தியில் ஆளுகின்ற அரசுகள்  ஆட்சி  மாறுகின்ற ஒவ்வொரு முறையும் அதற்கு சார்புடைய தொழிற்சங்கங்களை உருவாக்கிக் கொண்டது.  அரசியல் ரீதியாக, சாதீய ரீதியாக, கேடர் ரீதியாக தொழிலாளியைப் பிரித்து, தொழிற்சங்க பலத்தை குறைத்து பலவீனப்படுத்தி வைத்திருக்கிறது.   
சூழ்ச்சிதான் நடக்கிறது. நாமும் பிரிந்துதான் கிடக்கிறோம். இதைத் தெளிவாய் உணர்ந்த பின்னும் தொழிலாளி வர்க்கத்திடையே விட்டுக் கொடுக்கவோ, பரஸ்பரம் புரிதலை உருவாக்கிக் கொள்ளவோ பொது எதிரியை அடையாளப்படுத்தி அவர்களுக்கு எதிராக ஒன்றுபட்ட போராட்டத்தை உருவாக்கவோ எந்த வித முயற்சியும் எடுக்கப்படாமல், பரஸ்பரம் ஒருவரை ஒருவர் குறை கூறிக்கொள்வது, சேற்றை வாரி இறைப்பது என்ற போக்கு நீடிப்பதால் தொழிலாளி வர்க்க்ம் நெருக்கடிக்கு உள்ளாகி ஆளுவோரும் அதிகார வர்க்கமும இன்றைக்கு வளம் பெற்று நிற்கிறது,  
இந்த காலத்தில்தான் நமது தொழிற்சங்கமும் மேற்கண்ட காரணங்களுக்கெல்லாம் ஆட்பட்டு, அதே நேரத்தில் பொலிவிழக்காமல் வாழும் சங்கங்களில் ஒன்றாக திகழ்கிறது.   தலைவர்கள் குப்தா, ஞானையா, ஜெகன் பணியாற்றிய காலங்கள் இன்றைக்கும் பொற்காலங்களாக எண்ணிப்பார்க்கப்படுகிறது.  அந்தக் காலங்களில் நாம் அடைந்த பல முன்னேற்றங்களில் பலவற்றை இன்றைக்கு இழந்திருக்கிறோம்.  
அதைத் தொட்ர்ந்து தலைவர்கள் முத்தியாலு, ஆர்.கே, தமிழ்மணி, மாலி ஆகியோரின் சிறந்த பணிச் சேவைகளை தமிழ் மாநிலத்திற்கு அவர்களின் பணி ஓய்வுக் காலம் வரை நாம் பயன்படுத்திக் கொண்டோம்.

ஒவ்வொரு மாவட்டத்திலேயும் சீனியர் தலைவர்கள் ஓய்வு பெற்றிருந்தாலும் தோழர்கள் சேது, R.V, மாலி ஜெயபால் ஆகியோர்கள் அந்தந்தப் பகுதிகளின் பிதாமகர்களாக செயல்படுகிறார்கள்.

நமது இயக்கத்தை முன்னெடுத்துச் செல்ல தொடர்ந்து நாம் ஒற்றுமைப் பாதையைக் கைக் கொள்ள வேண்டும்.  
   
    அங்கீகாரத் தேர்தலில் அகில இந்திய அளவில் நாம் தோற்றிருந்தாலும் தமிழகத்தில் தொடர்ந்து உறுப்பினர் எண்ணிக்கையை குறையாது தக்க வைத்திருக்கின்றோம் என்பதை உணர்ந்திட வேண்டும்.  இதற்கு முழுமுதற் காரணம் நமது மாநிலச் செயலரின் தொய்வில்லாத சலியாத உழைப்பே, அணுகுமுறையே!

    நமது மாநிலச் செயலர் தோழர் பட்டாபியின் செயல்பாடு அதாவது, தோழமையோடு பழகும் பாங்கு, எளிமையான வாழ்வியல் முறை, எந்த எதிர்பார்ப்புமில்லா தியாகச் செயல்பாடு, எவர் கருத்துக்கும் மரியாதை கொடுக்கும் பாங்கு, எதிர்க் கருத்தை மதித்து நடக்கும் பண்பு, சாதீயச் சிந்தனையில் மூழ்காத, அதே நேரத்தில் கொண்ட அரசியல் கொள்கையில் பாதை மாறாத/உறுதி குலையாத நேர்மை தவறாத அணுகுமுறை ஆகியவற்றை  இம் மாநாட்டிலும் நீட்டிக்கச் செய்வோம்.
நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை நாமே முடிவு செய்வோம்.
வாழ்த்துக்கள் தோழர்களே!

அன்புடன்,
எஸ். சிவசிதம்பரம்,
மாநில துணைத் தலைவர்,
பட்டுக்கோட்டை.

Friday, November 9, 2012

சரிதானே!

     மனம் திறந்து பேசுங்கள்!    
மனதில் பட்டதையெல்லாம் பேசாதீர்கள்!
சிலர் புரிந்து கொள்வார்கள்.   சிலர் பிரிந்து செல்வார்கள்.

சிவப்பு மனிதனுக்கும் நிழல் கருப்புதான்!
கருப்பு மனிதனுக்கு இரத்தம்  சிவப்புதான்.
உள்ளங்களில் இல்லை வாழ்க்கை!     மனிதா!
எண்ணங்களில் உள்ளது வாழ்க்கை!

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR