21 ஆம் நூற்றாண்டின் சிகரெட் -- செல்போன்.
ஆண்டுகள் செல்லச் செல்ல
செல்போனும், செல்போன் டவர்களும் வெளிப்படுத்தும் கதிர்வீச்சு, சிகரெட்
ஏற்படுத்துவதைவிடக் கடுமையான பாதிப்புக்களை ஏற்படுத்துகின்றது என்று புதிய
அறிக்கைகள் வெளிப்படுத்துகின்றன.
நாடு முழுவதிலும் இதைப்
பற்றிய குற்றச்சாட்டுகள் எழுந்ததன் பயனாய் செப்டம்பர் 1 முதல் தொலைபேசித் துறை
கைபேசியின் கதிர் வீச்சுகளுக்கும், கைபேசி கோபுரங்களிலிருந்து வெளிவரும்
கதிர்வீச்சின் அளவான S A R இரண்டிலிருந்து 1.6 க்குக் குறைக்க
வேண்டும். கை பேசி கோபுரத்தினுடைய
பரப்பும் தன்மை இப்பொழுது உள்ளதைவிட பத்தில் ஒன்றாய்க் குறைக்க வேண்டும் என்னும்
உத்தரவுகள் போடப்பட்டுள்ளன.
கை பேசியைத் தொடர்ந்து
உபயோகப்படுத்துவதன் மூலம் புற்றுநோய் வருகிறது என்று உலக சுகாதார நிறுவனம்
அறிவித்துள்ளது. ‘அல்சிமேர்ஸ்’ என்னும் மறதி நோயும்
பார்வைக் குறைவு, கேட்கும் சக்திக் குறைவு போன்ற பிரச்சனைகள் முதல் மனநோய்கள் வரை
ஏற்படும் என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
கைபேசி கோபுரங்கள்
என்னும் வில்லன்கள்
கைபேசியின் கதிர்வீச்சுப்
பிரச்னை அதை உபயோகிப்பவர்களை மட்டுமே பாதிக்கும். கைபேசியை உபயோகிக்காதவர்களையும் கூட
கோபுரங்களில் இருந்து வரும் கதிர்வீச்சு பாதிக்கும். கோபுரங்களில் இருந்து 400 முதல் 500 மீட்டர் தூரத்திற்கு அப்பால் இருப்பது பாதுகாப்பானது.
காக்கைகள் போன்ற பறவைகளினுடைய எண்ணிக்கை குறைந்து
கொண்டிருக்கின்றது. பசு பால் கறப்பது
குறைகின்றது. பொரிக்காத கோழி
முட்டைகளினுடைய எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டுள்ளது. இப்படி கோபுரத்திலிருந்து வெளிப்படும் கதிர்
வீச்சினுடைய பிரச்சினைகள் அதிகமாகிக் கொண்டிருக்கின்றது.
அருகருகே பல கோபுரங்களை நிறுவுவதும் பல வியாபார நிறுவனங்கள் ஒரே
கோபுரத்தை உபயோகிக்கவும் செய்கின்ற நம் நாட்டில் எதார்த்தமான நிலைமை மிக
பயங்கரமானதாயிருக்கும். கோபுரத்தினுடைய
கதிர்வீச்சு மிரட்டல் குறைவதற்கு அரசாங்கங்களின் தலையீடு அவசியம். ஆனால், கைபேசி கதிர்வீச்சை நம்மால் தடுத்துக்
கொள்ள முடியும்.
சிட்டுக்குருவிகள் எங்கே
போயின?
ஓர் இடம் மனிதர்கள் வாழ்வதற்கு ஏற்றதா என்பதைத் தெரிந்து
கொள்வதற்கான மிக எளிமையான வழி, அந்தப் பகுதியில் சிட்டுக் குருவிகள் போலுள்ள சிறு
பறவைகள் வசிக்கின்றனவா என்பதை அறிந்து கொள்வதுதான். குருவிகள் வசிக்கும் ஒரு கூடு
இருக்கிறதென்றால் அங்குள்ள காற்றும் நீரும் தாவரங்களும் சுத்தமாக
இருக்கின்றனவென்று நாம் உறுதியாகச் சொல்லலாம்.
ஆனால், கைபேசிக் கோபுரங்களின் வரவிற்குப் பிறகு சுற்றுப்புறத்தினுடைய இந்த
நிலை தலைகீழாக மாறியுள்ளது. ஒரு கைபேசிக்
கோபுரம் நிறுவப்பட்டால் குருவிகள் அந்தப் பகுதியில் இருந்து போய்விடுமென்றும்,
கூடுகளில் உள்ள முட்டைகள் பொரிக்காமல் போகுமென்றும் சுற்றுப்புற ஆராய்ச்சியாளரும்
கொல்லத்தைச் சேர்ந்த எஸ். என் கல்லூரி ஆசிரியருமான டாக்டர் சைனுதீன் பட்டாபி பதிவு
செய்துள்ளார்.
தேனீக்களும் மற்ற உயிரணுக்களெல்லாம் கோபுரத்தைச் சுற்றிலுமுள்ள ஒரு
கிலோமீட்டர் எல்லையைவிட்டு வெளியேறிவிடுகின்றன.
கோபுரத்திலிருந்து வரும் சக்தி வாய்ந்த கதிர்வீச்சுத்தான் இதற்குக்
காரணமென்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
இவற்றைச் சுட்டிக் காட்டும் டாக்டர் சைனுதின் பட்டாபி உறுப்பினராக உள்ள
நிபுணர் குழுவின் அறிக்கையின் காரணத்தாலும கதிர் வீச்சிற்கு மத்திய அரசு
கட்டுப்பாடு விதித்துள்ளது.
அணில்களுக்கும் கதிர்வீச்சு பெரும் மிரட்டலாக உள்ளது.
கதிர் வீச்சிலிருந்து
பாதுகாத்துக்கொள்ள 10 வழிகள்
சில முன்னெச்சரிக்கைகளை கைக்கொண்டால் கைபேசி உபயோகிப்பதால் வரும்
பிரச்சனைகளிலிருந்து 90 சதவீதம் நாம் தப்பித்துக் கொள்ளலாம். குழந்தைகளின் மண்டையோட்டின் கனம் குறைவாக
இருக்கும் என்பதால் அவர்களுக்கு கதிர்வீச்சின் பாதிப்பு மிக
அதிகமாயிருக்கும். அதனால் குழந்தைகள் அதை
உபயோகிக்க அனுமதிக்கக் கூடாது.
1. பேசும் நேரம்
பேசியில் பேசுவதைவிட குறுந்தகவல்களை அனுப்பி, பேசும் நேரத்தைக்
குறைத்துக் கொள்ள வேண்டுமென்று மத்திய டெலிகாம் துறை அறிவிக்கின்றது. கைபேசியை காதுடன் சேர்த்து வைத்துப்
பேசுவதினுடைய அளவை முடிந்தவரை குறைக்க வேண்டும்.
ஒரு நாளில் ஆறு நிமிடங்களுக்கு மேல் கைபேசியை காதுடன் சேர்த்து வைத்துப்
பேசக்கூடாது. தவிர்க்க முடியாத நீன்ட
நேரம் பேச வேண்டிய சந்தர்ப்பத்தில் உள்ளோர் இரண்டு நிமிடங்களுக்கு ஒரு முறை பேசியை
இரண்டு காதுகளிலும் மாற்றி மாற்றி வைத்துப் பேச வேண்டும்.
2. பேசியைப் பிடிக்கும்
தூரம்
ஓர் அங்குல தூரத்தில் பேசியைப் பிடிக்க வேண்டும். பேசியின் இரண்டு அங்குலச் சுற்றளவில்தான்
கதிர்வீச்சின் தீவிரம் அதிகமாக இருக்கும்.
பேசியை அழுத்தி வைத்துப் பேசும்போது மூளைக்குள் துளைத்துச் செல்லும்
கதிர்வீச்சினுடைய அளவு அதிகரிக்கும்.
இதைத் தவிர்ப்பதற்கு பேசியை காதிலிருந்து சற்றுத் தள்ளிப்பிடிப்பது நல்லது.
பேசியை காதிலிருந்து ஓரங்குலம் தள்ளி வைக்கும் பொழுது கதிர்வீச்சுத் தாக்குதல்
பாதியாக்க் குறைவதாக அறிக்கைகள் சொல்கின்றன.
3. ஹேண்ட்ஸ் ப்ரீ
உடம்பிலிருந்து குறைந்த்து 15 சென்டிமீட்டர் தூரத்திலாவது பேசியைத்
தள்ளி வைத்து ஸ்பீக்கர் போனில் பேசுவது ஒரு சிறந்த வழி. சொந்த செய்திகளைப் பேசுவதற்கும், பொது
இடங்களிலும் இது சாத்தியமில்லாத ஒன்று.
அந்நிலையில் ஹேண்ட் பிரி ஹெட் செட்டுகளைப் பயன்படுத்தலாம். ஒயர் உள்ள ஹெட்செட், புளூ டூத் ஹெட்செட் என
இரண்டு வகைகள் உள்ளன. இவை நூறு சதவீதம் பாதுகாப்பானவை
என்று பலரும் கருதுகிறார்கள் என்றாலும் உண்மை அதுவல்ல. இவற்றின் வழியாகவும் குறைந்த அளவு கதிர்வீச்சு
உடலுக்குள் செல்கின்றது. அதனால் த்ரம்
வாய்ந்தவைகளை வாங்க முயற்சிக்க வேண்டும்.
காதுகளுக்குள் சொருகி வைக்க்க் கூடியவைதான் தெளிவாகக் கேட்கக் கூடியவை
என்றாலும் அப்படி இல்லாதவைதான் நல்லனவாகும்.
4. ஹெட்செட்டை உபயோகிக்கும்
விதம்
எந்த ஹெட்செட்டை உபயோகித்தாலும் கேட்கக் கூடிய அளவு மிகக் குறைந்த
சத்தத்தில் பயன்படுத்த வேண்டும். பேசி
முடித்தவுடன் காதிலிருந்து எடுத்து விட வேண்டும்.
புளூ டூத் ஹெட்செட் உபயோகிக்கின்ற பலரும் அதை ஒரு உடலுறுப்பு போலவே
எப்பொழுதும் உடலில் ஒட்டி வைத்தபடி இருப்பதுண்டு. பேசி முடித்தவுடன் அதை
உடலிலிருந்து கவனமாய் அப்புறப்படுத்தி வைக்க வேண்டும்.
5. ரிட்ரோ ஹேண்ட்செட்
ஹெட்செட்டிற்குப் பதிலாக விற்பனை செய்யப்படும் மற்றொரு உபகரணம்
இது. சாதாரண தொலைபேசியில் உள்ளதைப் போல
ரிசீவர் போன்ற உபகரணத்தை கைபேசியுடன் இணைத்துப் பாதுகாப்பாய் பயன்படுத்தலாம். எடுத்துச் செல்ல வசதிப்படாது என்றாலும
வீட்டிலும் அலுவலகத்திலும் பயன்படுத்தலாம்.
6. ரேஞ்ச் குறையும் நேரம்
கைபேசியில் சிக்னல் குறைவாயுள்ள சமயத்தில் பேட்டரி
சார்ஜ் வேகமாய் குறையும். சிக்னலைப்
பெறுவதற்காக கைபேசி அதிக ஆற்றலை செலவிடுவதுதான் இதற்குக் காரணம். இந்தச் சமயத்தில் பேசியிலிருந்து அதிக அளவு
கதிர்வீச்சு இருக்கும். அதனால் ரேஞ்சு
குறைவாயிருக்கும்பொழுது பேசியைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். தொடர் வண்டி, கார் போன்ற உலோகத்தால்
மூடப்பட்டுள்ள வாகனங்களில் பேசியை உபயோகிக்கும்பொழுதும் பரவுதல் அதிகமாய்
இருக்கும். அந்தச் சந்தர்ப்பங்களில்
கண்டிப்பாக ஹேண்ட் ப்ரீ கருவிகளை உபயோகப்படுத்த வேண்டும்.
7. தலைக்கருகில்
வைத்துப் படுக்கக் கூடாது
படுக்கும்பொழுது தலையணைக்கு அடியிலோ,
தலைக்கருகிலோ பேசியை வைக்கும் வழக்கம் பலரிடமும் காணப்டுகின்றது. தொடர்ந்து இப்படிச் செய்தால் தூக்கம் குறைவு, விடாத தலைவலி முதல் தீவிரமான கதிர்வீச்சுப்
பிரச்சனைகள் வரை அனுபவிக்க வேண்டிவரும்.
அதனால், உடலில் இருந்து, குறிப்பாக ஒரு மீட்டர் தூரத்திலாவது பேசியைத்
தள்ளிவைக்க வேண்டும்.
8. ஈரமான
தலைமுடியும் கண்ணாடியும்
குளித்து முடித்து ஈரமான தலைமுடியுடன்
கைபேசியை உபயோகிக்க வேண்டிய நிலை பலருக்கும் ஏற்படக்கூடும். இனி அது வேண்டாம். ஈரமாக உள்ள தலைமுடி கதிர்வீச்சை ஈர்க்கும்
அளவு இரண்டு மடங்காக அதிகரிக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். அது போலவே உலோகச் சட்டமுள்ள கண்ணாடி
அணிந்திருப்பவர்கள் கைபேசியில் பேசும் பொழுது கண்ணாடியைக் கழட்டி வைத்து விட
வேண்டும். கண்ணாடியினுடைய உலோகச் சட்டம்
கதிர்வீச்சின் அளவை அதிகரிக்கும்.
9. நெஞ்சுடன்
சேர்த்து வைக்கக் கூடாது
பேசும்பொழுது மட்டுமன்றி அது ஆன்
ஆகியிருக்கும் எல்லா நேரமும் கதிர்வீச்சு இருந்து கொண்டேயிருக்கும். சட்டையின் பாக்கெட்டில் பேசியை வைப்பது
இதயத்தையும். கால்சட்டையின் பாக்கெட்டில் வைப்பது ஆண்மைக் குறைவையும்
ஏற்படுத்துமென்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பேசியை உடலிலிருந்து ஓர் அங்குலமாவது தள்ளி வைக்க வேண்டும். இதய இயக்கத்தினை முடுக்கிவிடும் கருவி (PACE
MAKER)யைப் பொருத்தியுள்ளவர்கள் பேசியை நெஞ்சிலிருந்து குறைந்த்து 30 செ.மீ
தூரத்தில் வைக்க வேண்டும். கர்ப்பிணிகள்
கைபேசியை வயிற்றின் அருகில் கொண்டு போகவே கூடாது.
10. குறைந்த
சார்ஜீம் கைபேசிப் பையும்
பேட்டரி சார்ஜ் குறைவாயுள்ள பேசியில்
கதிர்வீச்சு அதிகமாயிருக்கும் என்பதால் சார்ஜினுடைய கடைசிக் கட்டத்தில் அதிக நேரம்
பேசக்கூடாது. உலோகத்தால் ஆன கைபேசிப்
பைகள், காந்தம் கலந்துள்ள பைகள் ஆகியவைகளால் கதிர்வீச்சின் தீவிரம்
அதிகரிக்கும். பையிலிருந்து வெளியில்
எடுத்து உபயோகிக்கும் பேசிகள்தான் நல்லது.
கைபேசியின் பின்பக்கத்தில்தான்
கோபுரத்திலிருந்து அலைகளை ஏற்றுக்கொள்ளும் ரிசீவர் உள்ளது. சிலர், பேசியை கைக்குள் மறைத்துப் பிடித்தபடி
பேசுகின்றனர். பேசிக்கும் கோபுர
சிக்னலுக்கும் இடையில் உள்ளங்கை ஒரு தடுப்பாய் மாறும்பொழுது கதிர்வீச்சின் தீவிரம்
அதிகரிக்கும். அதனால் கைபேசியின்
பின்பகுதி முழுவதும் வெளியில் தெரியும்படி பிடித்துக் கொண்டுதான் பேச வேண்டும்.
நன்றி: ஜனசக்தி நாளிதழ்
4/12/2012
கட்டுரையாளர்: மு.ந. புகழேந்தி