தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Sunday, January 21, 2018

இன்று ஜீவா பிறந்த நாள்.
20-01-1907
ஜீவா என்று அன்புடன் அழைக்கப்படும் தோழர் ப.ஜீவானந்தம், 
நாகர்கோவிலை அடுத்த பூதப்பாண்டி என்ற கிராமத்தில் 1907ம் ஆண்டுகளுக்கு இதே நாளில் பட்டத்தார்--உமையம்மாள் தம்பதியினரின் மகனாக பிறந்தார். இயற்பெயர் சொரிமுத்து. 

பகத்சிங் தூக்கிலிடப்பட்ட காலக் கட்டத்தில் அவருக்கு  அளிக்கப்பட்ட தூக்கு  தண்டனைக்கு எதிராக வெகுண்டெழுந்தார். அனல் கக்கும் பேச்சால்  அன்றைய இளைஞர்களின் மனதில் புரட்சிக் கனலை மூட்டினார். சிறையிலிருந்தபடி பகத்சிங் தன் தந்தைக்கு எழுதிய 'நான் ஏன் நாத்திகனானேன்?' எனும் நூலை தமிழில் மொழி பெயர்த்தார். அதை வெளியிட்டவர் பெரியார். பரபரப்பான இந்த நுாலை வெளியிட்டதற்காக, ஜீவாவின் கை கால்களை கட்டி விலங்கிட்டு,  திருச்சி முழுவதும் வீதி வீதியாக இழுத்துச் சென்று சிறையில் அடைத்தனர் காவல்துறையினர்.

1930 களில் தன்னை  சுயமரியாதை இயக்கத்தினராக அடையாளப்படுத்திக் கொண்ட ஜீவா, காங்கிரஸ் நடத்திய ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்து கொண்டு சிறை சென்றார். மீரட் சதி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு பொதுவுடமை தோழர்களுடன் சிறை சென்றார். வெளிவரும்போது தீவிர பொதுவுடமையாளனாக வெளிவந்தார்

கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய தலைவராக விளங்கிய தோழர் ஜீவா,  சீனாவின் இந்திய படையெடுப்பை கடுமையாக எதிர்த்தார். சீனா, இந்தியாவில்  ஆக்கிரமிப்பு செய்ததை ஜீவா ஏற்கவில்லை. கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய கவுன்சிலில் இதற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதில் முக்கிய பங்கு ஜீவாவினுடையது.

கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்ட காலத்தில் (1939--1942) பம்பாயிலும் சிறையிலும் தன் பெரும்பகுதியை செலவிட்டார். 1948-ல் கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டபோது இலங்கைக்கு சென்று செயலாற்றினார்.

1952- ம் ஆண்டு வண்ணாரப்பேட்டை தொகுதியில் இருந்து சட்டமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்டார். சட்ட மன்றத்தில் தனது பேச்சால் மற்ற தலைவர்கள் அனைவரையும் கவர்ந்தார் ஜீவா. அதுவரை பொதுமக்களை கவர்ந்த ஜீவாவின் பேச்சால், தலைவர்களும் ஈர்க்கப்பட்டனர். எதிராளியையும்  பேச்சால் தன் வசப்படுத்தும் தனித்துவம் மிக்கவராக ஜீவா விளங்கினார். ஜீவா சட்டமன்றத்தில் நிகழ்திய உரை "சட்டப்பேரவையில் ஜீவா" என்று நூலாகவும் வெளிவந்துள்ளது.
எதிரணியில் இருந்தாலும் அனைத்து தலைவர்களுடனும் நட்பு பாராட்டியவர் ஜீவா. காமராஜரால் பெரிதும் மதிக்கப்பட்டவர். நகைச்சுவை மேதை கலைவாணரின் பெருமதிப்பிற்குரியவராக ஜீவா இருந்தார். தலைமறைவு வாழ்க்கையில் ஜீவாவின் பெரும்பகுதி நேரம் கலைவாணரின் பாதுகாப்பில் கழிந்தது. 

இலக்கியத்தின் பால் தீராக தாகம் கொண்ட ஜீவா, தனது இறுதி காலத்தில் கலை இலக்கிய பெருமன்றத்தை துவங்கினார். இலக்கியத்தை மையப்படுத்தி 'தாமரை' இலக்கிய இதழை தொடங்கினார். 'ஜனசக்தி'  நாளிதழையும் தொடங்கினார்.
உடல்நலம் குன்றிய நிலையில் கடந்த 1963-ம் ஆண்டு ஜனவரி மாதம் 18- ம் நாள் இயற்கை எய்தினார் ஜீவா. ஜீவாவின் பொன்னுடலுக்கு கட்சி மாச்சர்யமின்றி தலைவர்களும், பொதுமக்களும் அஞ்சலி செலுத்தினர். பின்னாளில் மத்திய அரசு  அவர் தபால் தலையை வெளியிட்டு கவுரவம் செய்தது. 

மதமும் மனித வாழ்வும், புதுமைப் பெண், மேடையில் ஜீவா, தேசத்தின் சொத்து, கலை இலக்கியத்தின் புதிய பார்வை ஆகியவை ஜீவா தொடர்பான நுால்கள்.

இவரது நினைவாக கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் மணிமண்டபம் அமைத்து பெருமை சேர்த்துள்ளது தமிழக அரசு. புதுச்சேரியில் இவரது நினைவாக அரசு மேல்நிலைப் பள்ளிக்கு ஜீவானந்தம் என பெயரிட்டது புதுவை அரசு. பாட்டாளிகளின் குரலாய் ஒலித்த தோழர் ஜீவாவின் வாழ்வு என்றும் மக்களிடையே சிறந்து விளங்கும்.

No comments:

Post a Comment

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR